நியுயார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெற்ற இடத்திற்கு அருகில் இசுலாமிய மையம்
கட்டப்படுவதற்கானத் திட்டங்கள் குறித்து உரையாடல் தேவை – பேராயர் டோலன்
ஆக.20,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாதத்
தாக்குதல்கள் இடம் பெற்ற இடத்திற்கு அருகில் இசுலாமிய மையம் கட்டப்படுவதற்கானத் திட்டங்கள்
குறித்து கடும் வாக்குவாதங்கள் நடந்துவரும்வேளை இத்திட்டம் குறித்து மதிப்புடன்கூடிய
உரையாடல் இடம்பெற வேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார் நியுயார்க் பேராயர்
திமோத்தி டோலன்.
இந்த விவகாரம் முரண்பாடானது எனினும் இது குறித்து ஒவ்வொரு மட்டத்திலும்
மதிப்பும் அன்பும் கலந்த உரையாடல் தேவை என்று பேராயர் டோலன் மேலும் கூறினார்.
பயங்கரவாதத்
தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இசுலாமிய மையம் கட்டுவது, இத்தாக்குதல்களால்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதில் இறந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாக
இருக்கும் என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
அதேநேரம் இத்திட்டத்தின் மூலம் இசுலாமியர்கள்
தங்களது அமைதிநிறை விழுமியங்களையும் அவர்கள் பிறரோடு நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான விருப்பத்தையும்
வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதாக இருக்கும் என்று வேறுசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.