உலகில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது –ILO
அறிக்கை
ஆகஸ்ட் 12, 2010 உலகில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளதென ஐ.நா.வின்
பன்னாட்டுத் தொழில் நிறுவனம் (ILO) இப்புதனன்று தெரிவித்தது. இவ்வியாழனன்று ஐ.நா.அவை
நியூயார்க் நகரில் உலக இளையோர் ஆண்டை அறிக்கையிட்டுள்ள இந்த வேளையில் வெளியாகியுள்ள இந்த
அறிக்கையில், உலகில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட, பொருளாதார நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ள இளையோர் 62 கோடி என்றும், அவர்களில் 2009ம் ஆண்டில் 8 கோடியே 10 லட்சம் பேர்
வேலை இல்லாமல் இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் 11.9 விழுக்காடாக
இருந்த வேலையில்லா இளையோரின் எண்ணிக்கை 2009ம் ஆண்டு 13 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக இளையோரில் 90 விழுக்காடு வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்
என்றும், வேலையின்மை, வேலைகள் கிடைத்தாலும் தகுந்த ஊதியம் இல்லாமை என்ற பிரச்சனைகள் வளரும்
நாடுகளில் அதிகம் உள்ளன என்று ILOவின் தலைமை இயக்குனர் Juan Somavia கூறினார்.உலகம் இன்று
சந்தித்து வரும் பொருளாதாரப் பின்னடைவால் வேலையற்றுள்ள இளையோர், தகுந்த ஊதியம் பெறாத
இளையோர் ஆகியோரின் எண்ணிக்கை கூடிவருகிறதென்று உரைத்த தலைமை இயக்குனர், இந்தப் பிரச்சனையை
விரைவில் தீர்க்க இந்த இளையோர் ஆண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அழைப்பு
விடுத்தார்.