2010-08-11 15:48:53

இரஷ்யாவை அழித்து வரும் தீயிலிருந்து மக்களைக் காக்க கத்தோலிக்கர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மக்கள், முஸ்லிம்கள் செபங்களை எழுப்பி வருகின்றனர்


ஆகஸ்ட் 11, 2010 இரஷ்யாவை அழித்து வரும் தீயிலிருந்து தங்களைக் காக்க மழையை இறைவன் அனுப்ப வேண்டுமென அந்நாட்டின் கத்தோலிக்கர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மக்கள், முஸ்லிம்கள் என்று அனைவரும் செபங்களை எழுப்பி வருகின்றனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகச் செபங்களையும், திருப்பலிகளையும் ஒப்புக்கொடுக்க விண்ணப்பித்து, பேராயர் Paolo Pezzi மடல் ஒன்றை அனைத்து பங்குகளுக்கும் அனுப்பியுள்ளார்.

செபங்களோடு கூட, கத்தோலிக்கப் பங்குத் தளங்களிலும், ஆர்த்தடாக்ஸ் கோவில்களிலும் தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வண்ணம் பொருட்களும், நிதியும் திரட்டப்படுவதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

தீயினால், தலைநகரான Moscowவைச் சூழ்ந்திருந்த மேகமூட்டம் இச்செவ்வாயன்று சிறிது விலகியதாகவும், தலைநகரில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் காயப்பட்டோர், இறந்தோர், இன்னும் மூச்சுத் திணறலில் அவதிப்படுவோர் என்று பலராலும் நிரம்பியுள்ளதாகவும் இச்செய்தி மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.