தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் உரிமைகளுக்கென கறுப்பு தினம்
ஆகஸ்ட் 10, 2010. கிறிஸ்தவத்திற்கும் இசுலாமுக்கும் மதம் மாறிய தலித்துக்களுக்கு
உரிமைகளை மறுக்கும் அறுபது ஆண்டுகால அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக
இச்செவ்வாயன்று கறுப்பு தினத்தை கடைபிடித்தன இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள்.
இந்திய
இடஒதுக்கீட்டு அமைப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு, வேலைவாய்ப்பு, கல்வி,
அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவைகளில் அதிகமான சம வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆயினும், 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி இந்தியக் குடியரசுத்தலைவர் கையெழுத்திட்ட ஆணையின்படி
தாழ்த்தப்பட்ட வகுப்பு இந்துக்கள் மட்டுமே அரசின் இச்சலுகைகளைப் பெற முடியும். இருந்தாலும்,
பின்னாளில் இந்த அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பு
புத்த மற்றும் சீக்கிய மதத்தவர் இந்தச் சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.
கிறிஸ்தவத்திற்கும்
இசுலாமுக்கும் மதம் மாறிய தாழ்த்தப்பட வகுப்பினர் இச்சலுகைககளைப் பெற முடியாமலே இருக்கின்றனர்.
பல அரசியல் கட்சிகளும் அரசுகளும் இவர்களுக்குச் சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்து வந்த
போதிலும் கடந்த 60 ஆண்டுகளாக இது நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது.
இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக புதுடெல்லியில் இயேசுவின் திருஇதயப் பேராலயத்தின்முன் இச்செவ்வாயன்று
நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டெல்லி பேராயர்
Vincent Concessao, மதத்தின் அடிப்படையில்
ஏழைகளுக்கு எதிரான பாகுபாட்டின் தெளிவான அடையாளமாக இது இருக்கின்றது என்றார்.