2010-08-04 16:35:41

ஆகஸ்ட் 05 – நாளும் ஒரு நல்லெண்ணம்


வானமே எல்லை இல்லை.

அது வெறும் கண்ணுக்கு எட்டும் தூரம் தான்.

இதற்கு மேலும் பரந்து விரிந்து கிடக்கிறது வெட்ட வெளி.

நமக்கான ஆகாயம் இன்னும் திறந்தேதான் இருக்கிறது.

எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

அண்ணாந்துப் பார்க்க வைக்கும் ஆகாயம் தான் கடற்கரையிலோ பார்வைக்குக் கீழாகத் தெரியும். மறந்துவிட வேண்டாம். மயங்கிவிட வேண்டாம்.

ஆகாயம் வரை உயரத்துடிக்கும் மனமே!

மேகம், மழை என்ற கருணைக்கும், தீமை கண்டவிடத்தான இடி மின்னல் என்ற சீற்றத்திற்கும் நீ தயாரா?

ஆகாயத்திலிருந்து தான் எத்தனை அர்த்தங்கள் வருகின்றன?

சூரிய, சந்திர நட்சத்திரங்கள் என இதுவரை எல்லை காணவில்லை எந்த அறிவியல் முன்னேற்றமும்.

எல்லை எதுவாயிருக்கும் என எண்ணிப் பார்க்கக்கூட மனதிற்குச் சக்தியில்லை.

ஆதாயம் தேடாமல் அனைத்தையும் தூய்மையாகவே புதுப்பித்துத் தரும் இந்த அண்ட வெளியிலிருந்து என்று நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்?








All the contents on this site are copyrighted ©.