ஒருசமயம் அரசன் ஒருவன் ஒரு மரத்திற்குக் கீழே காயப்பட்டுக் கிடந்த குயில் குஞ்சு ஒன்றைக்
கண்டு கலங்கினான். அப்போது தன்னுடன் இருந்த அமைச்சரிடம், இந்தக் குஞ்சை அதன் பெற்றோர்கள்
ஏன் இப்படித் துன்புறுத்துகிறார்கள் என்று கேட்டான். அதற்கு அந்த அமைச்சர், அரசே இந்தக்
குயில் குஞ்சை இரண்டு காகங்கள் வளர்த்தன. அது குயிலின் குஞ்சு என்று அவற்றுக்குத் தெரியாது.
காக்கைக் கூண்டில் கள்ளத்தனமாக முட்டையிடுவது குயிலின் வழக்கம். இந்தக் குயில் குஞ்சு
சதா தொன தொனவெனப் பேசிக் கொண்டிருக்கும். இதனால் அந்தக் காக்கைகளுக்கு அந்தக் குஞ்சு
வேறு இனம் என்று தெரிந்து விட்டது. அதனால் அதைக் கூட்டிலிருந்தும் தள்ளி விட்டன. அடக்கமின்றிப்
பேசியதால் குயில் குஞ்சுக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால்
இந்தத் தண்டனை கிடைத்திருக்காது என்றார். அரசனும் அன்று முதல் வீண் பேச்சு பேசுவதை நிறுத்தி
விட்டார்.