தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கென கறுப்பு தினம்
ஜூலை30,2010: இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கும் இசுலாமுக்கும் மதம் மாறிய தலித்துக்கள்,
நாட்டின் அரசியல் அமைப்பில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி கறுப்பு தினம் கடைபிடிப்பதற்குத் தீர்மானித்துள்ளது
இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம்.
இந்தியாவின் 1950ம் ஆண்டின்
அரசியல் அமைப்பின் பத்தி மூன்றின்படி இந்து மதம் தவிர பிற மதங்களுக்கு மதம் மாறும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் அரசின் தாழ்த்தப்பட்டோருக்கானச் சலுகைகள் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்
என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும் 1990ல், தாழ்த்தப்பட்ட சீக்கிய மற்றும் புத்த மதத்தினர்,
அரசின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைக்கப்பட்டு சலுகைகளும் பெற்று வருகின்றனர்.
இந்தியாவின்
அப்போதைய அரசுத்தலைவர், 1950ம் ஆண்டின் அரசியல் அமைப்பின் பத்தி மூன்றில் கையெழுத்திட்ட
அதே ஆகஸ்ட் 10ம் தேதியை கறுப்பு தினமாகக் கடைபிடிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது இந்திய
தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை.
இதன்மூலம் தலித் கிறிஸ்தவர்களுக்கும் தலித் முஸ்லீம்களுக்கும்
நீதி வழங்கப்பட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளது
அவ்வவை.