ஒருசமயம் காட்டில் நான்கைந்து சிங்கங்கள் இராஜநடைபோட்டுச் சென்று கொண்டிருந்தன. தாங்கள்தானே
இந்தக் காட்டுக்கு இராஜாக்கள் என்ற பெருமிதம் அவைகளின் நடையில் தெரிந்தது. திடீரென அந்தப்
பக்கம் வந்த எருமை மாடுகளின் கூட்டம் காட்டுராஜாக்களைத் துரத்தத் தொடங்கவும் அந்த ராஜாக்களும்
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தன. ஆயினும் ஓர் எருமை மாடு ஒரு
சிங்கத்தை எதிர்த்து அதை மிதித்துக் கடித்துக் கொன்று போட்டது. இந்த மாடு தனியாக நின்று
ஒரு சிங்கத்தைக் கொன்று போடுமளவுக்குத் தைரியம் வந்தது எப்படி?. தனக்குப் பின்னால் தனது
கூட்டம் நிற்கின்றது என்ற உணர்வே இந்தத் தைரியச் செயலுக்குக் காரணம்.
பலம், உடலிலும்
மனதிலும் மட்டுமல்ல, குழுவாக இணைவதிலும் இருக்கிறது. இரண்டு தோள்கள் சுமப்பதைவிட நான்கு
தோள்கள் சுமக்கும் போது பளு குறையும். இரண்டு தலைகள் சிந்திப்பதைவிட நான்கு தலைகள் சிந்திக்கும்
போது புதிய தடங்கள் எளிதாக உருவாகும்.
அனைவரோடும் சுமுகமாய் இரு. பலரோடு அன்னியோன்னியமாய்
இரு. ஒருவருக்கு மட்டுமே நண்பனாய் இரு. ஆனால் எவரையும் எதிரியாக்கிக் கொள்ளாதே.