2010ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தோனேசியாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிரானத்
தாக்குதல்கள் இதுவரைக் காணாத அளவு உயர்ந்துள்ளது
ஜூலை 28, 2010 சனவரி முதல் ஜூலை வரையிலான 2010ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தோனேசியாவில்
கிறிஸ்துவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் இதுவரைக் காணாத அளவு உயர்ந்துள்ளதென அறிக்கை
ஒன்று கூறுகிறது. சமாதானம் மற்றும் குடியரசுக்கான Setara நிறுவனம், இத்திங்களன்று
வெளியிட்ட ஒரு அறிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இவ்வாண்டு நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்கள்
கவலை அளிக்கும் ஒரு போக்காக உள்ளதென கூறியுள்ளது. 2009ம் ஆண்டு முழுமையிலும் 18 தாக்குதல்
சம்பவங்களும், 2008ம் ஆண்டு முழுமையிலும் 17 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ள வேளை,
2010ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே 28 தாக்குதல் சம்பவங்கள் கிறிஸ்துவர்களுக்கு எதிராக
நடைபெற்றுள்ளன என்றும், இந்தப் போக்கு நீடித்தால், இவ்வாண்டின் இறுதியில் இவ்வகைத் தாக்குதல்கள்
மூன்று மடங்காக உயரும் ஆபத்து உள்ளதெனவும் இவ்வறிக்கை கூறுகிறது.இதுவரை 2010ம் ஆண்டில்
கிறிஸ்துவர்களின் கோவில்களைத் தாக்குதல், அவர்களது திருவழிபாடுகளில் இடையூறு செய்தல்,
புதிய கோவில்கள் கட்டப்படுவதைத் தடுத்தல் என்று முஸ்லீம் அடிப்படை வாதக் குழுக்கள் பல்வேறு
வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.