2010-07-27 15:14:56

விவிலியத் தேடல்:


RealAudioMP3
1863ம் ஆண்டு, புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் ‘அடிமைகள் விடுதலை’ என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த சில மாதங்களில் Eastman Johnson என்பவர் அந்த கருத்தை மையமாகக் கொண்டு அழகானதொரு ஓவியத்தைத் தீட்டினார்.
வறுமைச் சூழல் அப்பட்டமாகத் தெரியும் ஓர் இருண்ட அறையில், கருப்பினத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மங்கலான ஒளியில் அமர்ந்து, மடியில் ஒரு விவிலியத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பது போல் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது. அமெரிக்காவின் Smithsonian கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்திற்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு "ஆண்டவர் என் ஆயன்".
மேலோட்டமாகப் பார்த்தால், அந்த ஓவியத்திற்கும், கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லாததைப் போல் தெரியலாம். ஆனால், அந்த ஓவியத்தை உற்று நோக்கினால், பல நுணுக்கமான எண்ணங்கள் வெளிச்சத்திற்கு வரும். (இந்த ஓவியத்தை http://americanart.si.edu/collections என்ற இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.
கறுப்பினத்தவர் விடுதலை அடைந்ததும், அதுவரைத் தங்களை வதைத்து வந்த வெள்ளையரைப் பழி தீர்க்கும் புரட்சிகள், வன்முறைகள் வெடிக்கக்கூடும் என்று பயந்திருந்தனர் வெள்ளையர்கள். அந்த பயத்தை இந்த ஓவியம் ஓரளவு தீர்த்ததாகத் தெரிகிறது. தன்னைச்சுற்றிலும் அடிமைத்தனத்தை நினைவுறுத்தும் எல்லாம் அப்படியே இருந்த போதும், அமைதியாய் அமர்ந்து விவிலியத்தை வாசிப்பது போல் தீட்டப்பட்டிருந்த அந்தக் கறுப்பின மனிதர், வெள்ளையர் மனதில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் ஓர் அடையாளமாக இருந்தார் என்று கூறப்பட்டது.ஆனால், அதே நேரம், அந்த ஓவியத்தை வரைந்த Eastman Johnson மனதில் வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தமட்டில், வெள்ளையருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால்தான் கறுப்பினத்தவர் புரட்சி செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை; மாறாக, ஒரு கறுப்பின இளைஞன் வாசித்துக் கொண்டிருப்பதே ஒரு புரட்சிதான் என்று அவர் நினைத்தார். கறுப்பினத்தவருக்கு எழுத, படிக்கச் சொல்லித் தருவதே குற்றம் என்று கூறப்பட்டு வந்த அந்த அடக்கு முறையிலிருந்து தன்னைத் தானே அந்த கறுப்பின இளைஞன் விடுவித்துக் கொண்டார் என்பதை மறைமுகமாக இந்த ஓவியத்தின் வழியாகச் சொன்னார் Eastman Johnson. இந்த ஓவியத்தைக் கண்டவர்களில் பலர் இந்த அமைதியான புரட்சியைப் புரிந்து கொண்டனர்.
தன்னைச் சுற்றிலும் எந்த வித மாற்றங்களும் இல்லாத போது, அமர்ந்து விவிலியம் படிக்கும் அந்த இளைஞன் ஒரு புரட்சியை ஆரம்பித்துள்ளான். நம்பிக்கையை வளர்க்கும் அந்தப் புரட்சியை அவன் தனக்குள்ளேயே ஆரம்பித்துள்ளான். இந்த உலக வாழ்வில், திடீரென, கணப்பொழுதில் மாற்றங்கள் வரப்போவதில்லை. இருளும், துன்பமும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ள, மனதில் மாற்றங்களை உருவாக்குவதே பிற மாற்றங்கள் உலகில் ஏற்பட முதல் படி.
"ஆண்டவர் என் ஆயன்" என்ற திருப்பாடலின் மையப் பொருளும் இதுதான். இப்படி ஒரு புரட்சியை மறைமுகமாகச் சொல்லும் அந்த ஓவியத்திற்கு "ஆண்டவர் என் ஆயன்" என்ற தலைப்பு தரப்பட்டது மிகவும் பொருத்தம்தானே! வெளியில் எந்தவித மாற்றங்களும் இல்லாத போதும், உள்ளூர ஏற்படும் மாற்றங்களைப் பற்றிச் சொல்வதாலேயே திருப்பாடல் 23 ஓர் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது. அந்தச் சக்தியைப் பிறருக்குத் தந்துள்ளது.

நாம் வாழும் இந்த உலகில், நமது வாழ்வில் மாற்றங்கள் இருக்காது என்று சொல்வது ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது சரியெனப் படலாம். ஆனால், மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, மாற்றங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்ப்பது கடினம். மனித வரலாற்றைப் புரட்டும் போது, எத்தனை மாற்றங்களை நாம் கேள்விப்படுகிறோம். இப்படி மாற்றங்கள் மனித வரலாற்றை ஆக்கிரமித்த போதிலும், மனிதப் பிறவிகள் எல்லாருக்கும், எல்லாக் காலங்களிலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாற்றம் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. மாற்றங்கள் நடுவே, மாறாத அந்த உண்மை என்ன?
நாம் எல்லாருமே நாடோடிகள் என்பது தான் அந்த உண்மை. ஒரு நாள், ஓரிடத்தில் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தோம். ஒரு நாள், ஓரிடத்தில் அந்தப் பயணத்தை முடிப்போம். எனவே, இந்த உலகத்தில் நாம் எல்லாருமே பயணிகள், நாடோடிகள்.
மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எல்லா சமுதாயங்களும், எல்லா இனங்களும், குலங்களும் ஆரம்பத்தில் வாழ்ந்தது நாடோடி வாழ்க்கை மட்டுமே என்பது தெரிய வரும். உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிச் செல்லும் மிருகங்கள், பறவைகள் போல மனிதர்களும் துவக்கத்தில் உணவைத் தேடி, இடம் விட்டு இடம் பயணம் செய்தவர்கள்தான்.
யூதர்களும் இப்படி நாடோடிகளாய் வாழ்ந்தவர்கள். இந்த நாடோடிகளுக்கு இருந்த பெரும் சொத்து அவர்களிடம் இருந்த ஆடுகள். அந்த ஆடுகளுக்காக அவர்கள் எப்போதும் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்றனர். எந்த ஓர் இடமும் அவர்களுக்கு நிரந்தரம் இல்லாமல் போயிற்று. ஒவ்வொரு முறையும் புது இடம், புதுச் சூழல்... என்று வாழ வேண்டிய அந்த கட்டாயத்தில், தங்களையும், தங்கள் ஆடுகளையும் பாதுகாப்பது அவர்களுக்கு இரவும், பகலும் வாழ்வாயிற்று.
பாதுகாப்பு அதிகம் இல்லாத நாடோடிகளாய், இடையர்களாய் வாழ்ந்து வந்த இஸ்ராயலர்கள் வரலாற்றின் அடுத்தக் கட்டம் அவர்கள் அடிமைகளாய் வாழ்ந்த காலம். அடிமைகளாய் பல நாடுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வாழ்க்கை இன்னும் அதிகம் பாதுகாப்பற்றதாய் மாறியது. உலகம் முழுவதும் புதை மணலாய்த் தெரிந்தது. வைக்கும் ஒவ்வோர் அடியும் உறுதியானத் தரையில் ஊன்றப்படாமல், ஓடுகின்ற நீரிலோ, புதை மணலிலோ ஊன்றப்பட்டதைப் போலவே உணர்ந்தனர் இஸ்ராயலர்கள்.

இப்படி பல நூறு ஆண்டுகள் அடிமைகளாய் பல தலைமுறையினர் வாழ்ந்த அந்தப் பாதுகாப்பற்ற வாழ்வில், அவர்களுக்கு மனதில் நம்பிக்கையை வளர்த்த ஓர் உருவகம்... ஆயன் என்ற உருவகம். இதற்கு முக்கிய காரணம்... ஆபேல் முதல், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என்று அவர்களது பெரும் தலைவர்கள் யாவரும் ஆயர்களாய் இருந்ததுதான். தாவீதும் ஓர் ஆயனாய் இருந்து பின் அரசரானவர்.
நல்லதோர் ஆயன் எப்படிப்பட்டவன்? பசி என்று சொல்வதற்கு முன்பே, ஆடுகளைப் பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்பவன், புல்வெளிகள் காய்ந்து விட்டால், தன் கழி, கோல் கொண்டு மரக்கிளைகளை வளைத்து அல்லது உடைத்து உணவு கொடுப்பவன், தாகம் என்பதைச் சொல்லும் முன்பே நீர்நிலைகளுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்பவன், ஓநாய்கள் தூரத்தில் வரும்போதே அவைகளிலிருந்து ஆடுகளைக் காப்பவன்...
இப்படி ஆடுகளின் தேவைகளை எல்லாம் குறிப்பறிந்து நிறைவு செய்யும் ஆயனாய் இஸ்ராயலர்கள் வாழ்ந்து பழகியவர்கள். ஆடுகளைக் காத்த ஆயர்களாய் இருந்த அவர்கள் வாழ்வே பாதுகாப்பற்றதாய் மாறிய போது, அவர்களே திசையும், இலக்கும் இன்றி அலையும் ஆடுகளைப் போல் வாழ்வதாய் உணர்ந்த போது, ஆயர்களாய் இருந்த தங்கள் தலைவர்களை நினைத்துப் பார்த்தனர். அந்தத் தலைவர்களை வழிநடத்திய பெரும் ஆயரான கடவுளை எண்ணிப் பார்த்தனர். அவர்கள் தேடிய அந்தப் பாதுகாப்பைத் தரக்கூடியவர் ஆயனாக வரும் ஆண்டவரே என்று நம்பினர்.

பாதுகாப்பாய் வாழ்வது எந்த ஒரு மனித மனமும் ஆழமாய்த் தேடும் ஓர் உணர்வு. இரவில் படுக்கப் போகும்போது, நம்மில் பலர் கண்களை மூடி வேண்டுகிறோம். நாம் கண் அயர்ந்தாலும், கடவுள் கண் விழித்து நம்மைக் காக்க வேண்டும் என்ற வேண்டுதல் தான் இரவில், இருளில் நாம் சொல்லும் அந்தச் செபம்.
இரவு, இருள் என்றாலே பயம் கலந்த பல உணர்வுகள் மனதில் எழத்தானே செய்யும். இரவைப் பற்றிய பயத்தைக் கூறும் ஒரு கதை. மாடசாமி என்பவர் தினமும் இரவில் தூக்கம் வராமல் பயந்து வாழ்ந்தார். அவர் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழ் ஒவ்வொரு இரவும் ஒரு பெரிய காடு வளர்ந்தது போலக் கனவு கண்டார். அந்தக் காட்டிலிருந்து மிருகங்கள் வந்து அவர் படுக்கையைச் சுற்றி நின்று அவரை விழுங்குவதைப் போல் ஒவ்வோர் இரவும் நினைத்து பயந்தார். இப்படி இரவெல்லாம் தூக்கத்தைத் தொலைத்ததால், அடுத்த நாள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். பல மன நல மருத்துவர்களையெல்லாம் சந்தித்தார். ஒரு பயனும் இல்லை.
ஒரு நாள் காலையில் மாடசாமி படுக்கை அறையை விட்டு வெளியே வரும் போது, மிக உற்சாகமாக இருந்தார். அவர் நண்பர் காரணம் கேட்டபோது, "நேற்றிரவு என் நண்பர் ஒருவர் வந்தார். ஒவ்வொரு இரவும் நான் உறங்காமல் தவித்ததை அவரிடம் சொன்னேன். அவர் என் பயத்தை நீக்கிவிட்டதால் நான் நன்கு உறங்கினேன்." என்றார் மாடசாமி. "உங்கள் நண்பர் பெரிய மன நல மருத்துவரா?" என்று நண்பர் கேட்டார். "இல்லை, இல்லை, அவர் தச்சுவேலைச் செய்பவர்." என்று மாடசாமி கூறியதும், நண்பர் குழம்பிப் போனார். "என் நண்பரிடம் கட்டிலுக்கடியில் வளரும் காடு பற்றி சொன்னேன். அவர் என் கட்டில் கால்களையெல்லாம் அறுத்து விட்டார். காடு வளர இடமில்லாமல் போனது. எனவே, என்னால் அமைதியாகத் தூங்க முடிந்தது." என்று விளக்கினார் மாடசாமி. மாடசாமியின் கதை சிரிப்பைத் தரலாம். ஆனால், அது பாடங்களையும் தருகின்றது. மறுக்க முடியுமா?

இரவுகள், இருள் இவைகளைக் கண்டு பயப்படாதக் குழந்தைகளைப் பார்ப்பது அபூர்வம். அந்தக் குழந்தைகளின் பயம் போக்கும் ஒரு அற்புத வழி அருகில் தாயோ, தந்தையோ இருப்பது. தாயின் மீது, தந்தையின் மீது கைகளை, கால்களைப் போட்டபடி படுத்துறங்கும் எத்தனைக் குழந்தைகள் உண்டு. தனியே படுக்க வேண்டிய வயது வந்ததும், பல குழந்தைகள் கரடி பொம்மை (Teddybear) ஒன்றை வைத்துக் கொண்டு தூங்கப் பழகிக்கொள்கின்றனர்.
இருள் பற்றிய நம் குழந்தைக் கால பயங்கள் வளர்ந்த பிறகும் நம்முடன் தங்குவதைப் பார்க்கலாம். நாம் உறங்கும் எத்தனை அறைகளில் இரவு விளக்குகள் எரிகின்றன. கண்களை உறுத்தாமல் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருக்கும் இந்த விளக்கு என்ன செய்கிறது? தூக்கத்தைக் கெடுக்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம், இரவில் தப்பித் தவறி நாம் கண் விழித்தால், நாம் படுத்திருக்கும் அறையின் பழக்கமான அடையாளங்களை மீண்டும் நமக்குக் காட்டி, நம்மை அமைதிப்படுத்துகிறது அந்த விளக்கு. அல்லது இரவில் தாகம் தீர்க்கவோ, மற்ற தேவைகளுக்கோ நாம் நடக்க வேண்டியிருந்தால், நமக்குப் பாதை காட்டுகிறது அந்த விளக்கு. இரவோ, இருளோ நீங்குவதில்லை. இரவைப் பற்றிய பயங்களைச் சமாளிக்க நாம் கற்றுக் கொள்கிறோம் பல வழிகளில். இப்படி இரவை, இருளை நீக்காமல், அந்த இருள் பற்றிய நம் பயங்களை நீக்கி, நம்மை நிம்மதியாகத் தூங்க வைக்கும் பெற்றோராய், ஒரு கரடி பொம்மையாய், இரவு விளக்காய், இன்னும் பல வழிகளில் இறைவன் நம் பின்னணியில் இருப்பதைத்தான் "ஆண்டவன் என் ஆயன்." என்ற வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆயனாகிய நம் ஆண்டவரோடு தொடர்வோம் நம் பயணத்தை.







All the contents on this site are copyrighted ©.