மக்கள் தொகை பெருக்கம் குறித்த அரசு அறிக்கையை இந்தியத் திருச்சபை வரவேற்றுள்ளது
ஜூலை 20, 2010. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக்
கடுமையான முறைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசு அறிக்கையை வரவேற்றுள்ளது தலத்திருச்சபை.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடு வீதம் இருந்து வருகிறது.
மக்கள் தொகை தற்சமயம் ஏறத்தாழ 120 கோடியாக இருக்கின்றது, இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள்
சீனாவை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள
மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி அசாட், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு
எந்தவிதக் கடுமையான முறைகளையும் அரசு பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இவ்வறிக்கையை
வரவேற்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் குடும்ப ஆணையத் தலைவர் ஆயர் ஆக்னெல்லோ கிரேசியஸ்,
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சில முறைகள் வெளிப்படையாகத் தெரியவில்லையெனினும் அவை
நாட்டில் இடம் பெற்று வருகின்றன என்றார்.
உலகின் பல நாடுகளில் போதுமான மக்கள்
இல்லை என்ற பயமும் பிறப்பு விகிதமும் குறைவாகவே இருந்து வருகிறது, இந்த நிலை இந்தியாவில்
நுழையாது என்று நம்புவோம் எனவும் கருத்து தெரிவித்தார் ஆயர் கிரேசியாஸ்.