நிலவைக் காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டிய காலம் ஒன்று இருந்தது. இன்று பாவம் குழந்தைகள்,
நிலவைக் காட்டி சோறூட்டும் அளவுக்கு அம்மாவுக்கு நேரம் இல்லை; இந்த நகர விளக்குகளின்
ஒளி வெள்ளத்தில் நிலவும் தெரிவதில்லை. நிலவை வைத்து, காதலை வளர்த்தக் காலம் ஒன்று
இருந்தது. வளர் பிறை, தேய் பிறை என்றெல்லாம் அன்பை வர்ணிக்கவும் காலம் இருந்தது. இன்று...
எல்லாமே நொடிப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல்களாகிவிட்டன.
நாற்பது ஆண்டுகளுக்கு
முன் வரை நிலவு எட்டாத தூரத்தில் இருந்ததாக நாம் நினைத்தோம். எனவே அதைச்சுற்றி கனவுகளை,
கற்பனைகளை வளர்த்தோம். எதுவும் எட்டாத தூரத்தில் இருக்கும் போது, இனிப்பாக இருக்குமோ
என்று நம் ஆர்வத்தைத் தூண்டும். பல முறை முயன்றும், எட்டாத தூரத்திலேயே அது இருந்தால்,
புளிப்பாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். எட்டிவிட்டால், அது சுவையற்றுப் போய்விடும்
ஆபத்து உண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் காலடி வைத்தாலும்,
வைத்தார்கள்... நிலவைப் பற்றிய நம் கவனமும், கனவுகளும் குறைந்து விட்டன. கரைந்து விட்டன.
இவர்கள் இருவரும் நிலவில் இறங்கியது 1969ம் ஆண்டு ஜூலை 20. நிலவில் அவர்கள் நடந்த நாள்...
ஜூலை 21.