ஜூலை17,2010 கறுப்பின காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா அமைதிக்கும் சுதந்திரத்திற்குமென
ஆற்றி வரும் பணியைக் கௌரவிக்கும் விதமாக இவ்வாண்டு முதல் முறையாக சர்வதேச நெல்சன் மண்டேலா
நாளைக் கடைபிடித்தது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச்
சிறப்பு சர்வதேச தின நிகழ்வுக்குச் செய்தி அனுப்பிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்,
மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கு மற்றவர்கள் செய்ததையே நெல்சன் மண்டேலா
எப்பொழுதும் பேச விரும்புவார், இவரின் இப்பண்பே கோடிக்கணக்கான மக்களுக்குத் தூண்டுதலாக
இருக்கின்றது என்றார்.
தென்னாப்ரிக்காவின் முன்னாள் நிறவெறி எதிர்ப்பு நடவடிக்கையாளர்
நெல்சன் மண்டேலா பிறந்த தினமான ஜூலை 18ம் நாளை, சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகக் கடைபிடிக்க
வேண்டுமென்று 2009ம் ஆண்டு நவம்பரில் ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.
நெல்சன் மண்டேலாவின்
67 வருடப் போராட்டத்தை நினைவுகூரும் விதமாக இஞ்ஞாயிறன்று தென்னாப்ரிக்காவில் 67 நிமிட
நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு தனது 92வது பிறந்த நாளைச் சிறப்பிக்கிறார்
நெல்சன் மண்டேலா.