ஹாங்காங்கின் தொழிலாளர் நலனுக்கான கத்தோலிக்கக் குழுவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்
ஜூலை 14, 2010. அடிமட்ட ஊதியம் போதுமானதாக இருக்க வேண்டுமென்ற சட்டம் அமல்படுத்தப்பட
வேண்டுமென்று ஹாங்காங்கின் தொழிலாளர் நலனுக்கான கத்தோலிக்கக் குழுவினர் இச்செவ்வாயன்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங் பகுதிக்கான நீதிக் குழு அலுவலகத்தில் இச்செவ்வாயன்று
ஆரம்பமாகி, அடுத்த மூன்று நாட்கள் தொழிலாளர் நலன் குறித்து நடைபெறும் கருத்தரங்கிற்கு
வருகை தந்துள்ள பல தொழில் நிறுவன அதிபர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
செபங்களுடனும், ஏற்றப்பட்ட மெழுகு திரிகளுடனும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்
போது, ஹாங் காங் பகுதிக்கான நீதிக் குழு அலுவலகத்தின் தலைமை இயக்குனரான Donald Tsang
Yam-kuenஇடம் திருத்தந்தை எழுதிய Caritas in Veritate என்ற சுற்றுமடலின் ஒரு பிரதியும்,
ஒரு பூதக் கண்ணாடியும் கொடுக்கப்பட்டதென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Donald
Tsang ஒரு கத்தோலிக்கர் என்பதால், தொழிலாளர் நலன் குறித்து திருத்தந்தை எழுதியுள்ள இந்த
மடலை அவர் கூர்ந்து படிக்கச் சொல்லியே மடலும், பூதக் கண்ணாடியும் வழங்கப்பட்டதென இந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட Mak Yau கூறினார்.