2010-07-13 16:07:19

பெல்ஜியம் கர்தினால் மீதானக் குற்றச்சாட்டு பொய்யானது என அறிவித்துள்ளது அரசு வழக்குரைஞர் அலுவலகம்


ஜூலை 13, 2010 பெல்ஜியம் கர்தினால் Godfried Danneels பன்வலைத்தளத்திலிருந்து தனது கணனிக்கு, சீர்கேடான பாலின இலக்கியங்களைத் தரவிறக்கம் செய்தார் என்றக் குற்றச்சாட்டு பொய்யானது என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு வழக்குரைஞர் அலுவலகம்.

கீழ்த்தரமான இலக்கியங்களைக் கர்தினால் தரவிறக்கம் செய்தார் என பெல்ஜியம் பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட அரசு வழக்குரைஞர் அலுவலகம், இக்குற்றச்சாட்டு தவறானது என அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கர்தினால் மீதான இந்த பொய்யான குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது குறித்து செய்தி வழங்கிய கர்தினாலின் அதிகாரப்பூர்வப்பேச்சாளர் Hans Geybels, இது குறித்த முழு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், பொய்யான தகவல் தந்த பத்திரிகை மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்றார்.

ஏற்கனவே பாலின அத்துமீறல் நடவடிக்கை தொடர்பாக பெல்ஜியம் காவல்துறை, ப்ரஸல்ஸ் பெருமறைமாவட்ட அலுவலகங்களில் சோதனைகள் நடத்தியதும் திருத்தந்தையின் கண்டனத்துக்கு அது உள்ளாகியதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.