1987ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 11 உலகின் மக்கள் தொகை 5 Billion ஐ, அதாவது, 500 கோடியைத்
தாண்டியதாம். அந்த ஆண்டு முதல் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை நாள் என அழைக்கப்படுகிறது.
நாட்களைக் குறித்து பேசும்போது, அந்த நாள் கொண்டாடப்படுகிறது என்றுதான் அதிகமாய் சொல்வோம்.
ஜூலை 11 உலக மக்கள் தொகை நாள் எனக் கொண்டாடப்படுகிறது என்று சொன்னால், நம்மில் பலருக்கு
உடனே ஒரு கேள்வி எழும். உலக மக்கள் தொகை பற்றி கொண்டாட என்ன இருக்கிறது என்ற கேள்வி.
மக்கள் தொகை என்றதும் முதலில் மனதில் தோன்றுவது எண்கள், அவைகளைத் தொடரும் எண்ணங்கள்.
கவலை தரும் எண்ணங்கள். 2009ம் ஆண்டு உலக மக்கள் தொகை 680 கோடி என்று சொல்லப்பட்டது.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் வாழ்வது ஆசியாவில். அதிலும், சீனா, இந்தியா என்ற
இரு நாடுகளில் மட்டும் 40 விழுக்காட்டினர். 2011ம் ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடியைத்
தாண்டும், 2025ல் 800 கோடியையும், 2045ல் 900 கோடியையும் தாண்டும் என்பது இப்போதையக்
கணிப்பு. மக்கள் தொகை என்பது வெறும் கணிப்பா? கணக்கா?மக்கள் என்றதும் வெறும் எண்கள்
மட்டுமே மனதை நிறைக்கின்றனவா? அல்லது வேறு உயர்வான எண்ணங்கள் மனதில் எழுகின்றனவா?