வாழ்க்கை. இது ஒவ்வொரு நாளும் அழகாகச் சில விடயங்களையும், அழகில்லாமல் சில விடயங்களையும்
சொல்லித் தந்து கொண்டே இருக்கிறது. எத்தனை அருவிகள் கலந்தாலும் கடல் ஒன்றுதான். எத்தனை
நாசிகள் நுகர்ந்தாலும் காற்று ஒன்றுதான். எத்தனை மேகங்கள் நகர்ந்தாலும் வானம் ஒன்றுதான்.
இப்படி வாழ்க்கை தினமும் விதவிதமாய் தத்துவங்களைக் கற்றுத் தருகின்ற பள்ளிக்கூடமாய் இருக்கின்றது.
இத்தகைய அற்புதமான வாழ்க்கையை விட்டுவிட்டு எங்கும் ஓடிவிட முடியாது. இந்த வாழ்க்கையும்
எங்கும் சென்று விடாது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். எல்லா இரவுகளும் விடியும்.
எனவே இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும். என்னை நேசிக்காத சில நிமிடங்களுக்காக
நான் வருத்தப்பட முடியாது. இனி வரப்போகிற நிமிடங்களை நேசிக்காமலும் விடமுடியாது. இந்த
வாழ்க்கையின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் கைதட்டி இரசிக்க வேண்டும். உண்மையில் கடந்த காலம்
என்பது நாம் சுமக்கத் தேவையில்லாத மிகப் பெரிய சுமை. அதைச் சுமந்து கொண்டே அலைபவர்கள்
நிகழ்காலத்தைப் பாழடித்து எதிர்காலத்தையும் இழந்து விடுகிறார்கள்.