கோவாவில் இரு கத்தோலிக்கக் கல்லறைகள் அடையாளம் தெரியாத மனிதர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
ஜூலை 05, 2010. கோவாவில் இரு கத்தோலிக்கக் கல்லறைகள் அடையாளம் தெரியாத மனிதர்களால்
தோண்டியெடுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத உணர்வுகளுக்கு ஊறு விளைவித்துள்ளதாக
வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கோவா காவல்துறை
அறிவித்தது.
அடக்கம் செய்யப்பட்டோரின் இரு கல்லறைகள் தோண்டப்பட்டதும், சிலுவை
ஒன்று நீக்கப்பட்டதும் குறித்து கோவா வெல்ஹா புனித ஆன்ட்ரூ கோவிலின் பங்குத் தந்தை ராவுல்
கொலாகோ காவல்துறையிடம் புகார் அளித்ததைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தேடி வருவதாகக் காவல்துறை
அறிவித்துள்ளது.
இறந்தவர்கள் உடலில் நகை இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் சில திருடர்கள்
இந்த இரு கல்லறைகளையும் தோண்டியிருக்கலாம் என காவல்துறை சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.
ஏனெனில் இவ்விரு கல்லறைகளும் இதற்கு முந்தைய நாளும் இருநாட்களுக்கு முன்னரும் இறந்தவர்களுடையவை.