பழைய கதை ஒன்று
சொல்லப் போகிறேன், ஒரு சில மாற்றங்களுடன். பல நூறு தொழிலாளிகள் சேர்ந்து அரண்மனை ஒன்றைக்
கட்டிக் கொண்டிருந்தனர். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அங்கு நடந்த வேலைகளை ஆர்வத்தோடு
பார்த்தார். மரக்கட்டைகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருந்த ஒருவரிடம் சென்று,
"ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "தச்சு வேலை செய்கிறேன்." என்று பதில் வந்தது.
கல்லில் அழகிய சிற்பம் ஒன்றை வடித்துக் கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?"
என்று கேட்டபோது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்." என்று
சலிப்புடன் பதில் சொன்னார் அந்த சிற்பி. அடுத்து, உண்மையிலேயே கல் உடைத்துக் கொண்டிருந்த
ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி,
நெஞ்சை நிமிர்த்தி, "நான் அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்." என்றார். செய்யும்
தொழில் எதுவாக இருந்தாலும், பார்க்கும் பார்வை பெரிதாக, உயர்வாக, பரந்ததாக இருந்தால்
செய்யும் தொழில் உயர்வடையும். பல நேரங்களில், தாழ்ந்ததெனப் பொதுவாக நாம் கருதும் தொழில்களைச்
செய்பவர்கள் அந்தத் தொழிலைச் செய்யும் போது காட்டும் ஈடுபாடு நம்மைப் பிரமிக்க வைக்கும்.
நாம் உணவருந்த செல்லும் ஹோட்டல்களில் பல நேரங்கள் மேசைகளைத் துடைப்பவர்கள் அந்த வேலையை
ஈடுபாட்டுடன் செய்வதைப் பார்க்கும் போது, ஏதோ அவர்கள்தான் அந்த ஹோட்டலை நடத்துபவர்கள்
போல் தெரியும். அத்தனை பெருமிதம் அவர்கள் கண்களில் ஒளிரும். செய்யும் தொழிலை எப்படி
செய்வது என்பது பற்றிய பாடங்கள் ஏன் என்ற குழப்பமா? சென்ற வாரம் அழைப்பு. இந்த வாரம்
உழைப்பு. சென்ற வாரம் நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப் பற்றி சிந்தித்தோம். இந்த வாரம்
அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப் பற்றி சிந்திப்போம். நமது சிந்தனைகளை
ஆரம்பித்து வைக்கட்டும் இன்றைய நற்செய்தி.
லூக்கா நற்செய்தி 10: 1-12,17-20
“அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு” என்ற இன்றைய நற்செய்தியின்
ஆரம்ப வரிகளைச் சொல்லி, தேவ அழைத்தலுக்கு வேண்டும்படி சொல்வோம். தேவ அழைத்தல் என்றதும்,
குருக்கள், துறவற சகோதரர்கள், சகோதரிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுகிறது.
“அறுவடைக்கு வேலையாள்கள் தேவை” என்று இயேசு கூறியது குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும்
அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு
துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த வரிகளைச் சொல்லி இருப்பார். அறுவடைக்கு
வேலையாள்கள் தேவை… என்ற உருவகத்தைக் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம். அறுவடை நடப்பதைப் பார்த்திருப்பீர்கள்,
இல்லையா? அறுவடை செய்வது ஒரு தனிப்பட்டக் கலை. ஓ, இது என்ன பெரிய கலை? பயிர் வளர்ந்துள்ளது,
கையில் அரிவாள் உள்ளது. சும்மா அறுத்துத் தள்ள வேண்டியது தானே! இப்படி நினைப்பவர்களைப்
பார்த்து, நாம் பரிதாபப்பட வேண்டும். வாய்த் திறமையில் இப்படி அறுவடைச் செய்பவர்களின்
கையில் அரிவாளைக் கொடுத்து, வயல் வெளியில் இறங்கி, அறுவடைச் செய்யச் சொன்னால் தெரியும்...
வெட்டப்படுவது கதிர்களா? அல்லது, கைவிரல்களா? என்று... மீண்டும் சொல்கிறேன். அறுவடை
செய்வது ஒரு தனிப்பட்டக் கலை. அறுவடை செய்பவர்கள் தனித்து செயல்படுவதில்லை. எல்லாரும்
சேர்ந்து ஒரே வரிசையில் அறுத்தபடியே முன்னேறுவர். அப்படி குனிந்து அறுவடை செய்யும் போது
ஏற்படும் உடல் வலிகளை மறக்க, அவர்கள் பாடல்கள் பாடுவதும் உண்டு. சேர்ந்து உழைப்பது, முழு
மன, உடல் ஈடுபாட்டுடன் உழைப்பது என்று அறுவடை செய்பவர்களிடம் இருந்து பல பாடங்கள் படித்துக்
கொள்வதை விட்டு விட்டு, இது என்ன பெரிய பிரமாதம் என்று ஏளனமாய்ச் சொல்பவர்கள்... பாவம்,
பரிதாபத்திற்குரியவர்கள். இப்படி தனிப்பட்டத் திறமையுடையவர்களை மனதில் வைத்தே, இயேசு
தன் அறுவடைக்கு வேலையாள்கள் வேண்டும் என்று கேட்கிறார். இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை
அறுவடை செய்ய, தனித் திறமைகள் வேண்டும். இந்தத் திறமைகளை இன்றைய நற்செய்தியில் இயேசு
நிபந்தனைகளாக சொல்கிறார்.
முதல் நிபந்தனை: "ஓநாய்கள் மத்தியில் செல்லக்கூடிய
ஆட்டுக் குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, அன்பர்களே, ஆட்டுக் குட்டிகள்.
ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகளா? விபரீதம் இது. ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள்
வீரக் கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும். நீள, அகல,
உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்தான் கோலியாத்து. அவனது
தோற்றம் பற்றி 1சாமுவேல், 17: 4-7ல்
வாசித்துப் பாருங்கள். அந்த மனித மலையோடு மோத, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களை
எல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்படும் தாவீது என் நினைவுக்கு
வருகிறார். இளையவன் தாவீதுக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? தன்னையும், தன் ஆடுகளையும்
இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து
தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கை... (1சாமுவேல், 17: 37) ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக்
குட்டி செல்லுமா? தாவீது சென்றார்.
"யார் இந்த அரை நிர்வாண பரதேசி?" என்று ஆங்கில
அரசு ஏளனமாக விவரித்த நமது காந்தியடிகள் என் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய்,
நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக் குட்டி, அந்த ஓநாய்களின் அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப்
படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு. ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகள் செல்லுமா?
வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்கள்
மத்தியில் தலை நிமிர்ந்து வீர நடை போடும். இப்படி, நம்பிக்கையோடு ஓநாய்கள் மத்தியில்
நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகள் இயேசுவுக்குத் தேவை.
ஓநாய்கள் மத்தியில் போக
வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி. அதற்குத் தகுந்தது போல், எல்லா ஏற்பாடுகளும்
செய்து கொள்ள வேண்டாமா? கோலியாத்தை எதிர்த்துச் செல்லும் போது, ஒரு கவசம், ஒரு கேடயம்,
ஓர் ஈட்டி... குறைந்தது, ஒரு கத்தி? ஊஹூம்... ஒன்றும் வேண்டாம் என்கிறார் இயேசு. "பணப்பையோ,
வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்." என்று வருகிறது இயேசுவின்
இரண்டாவது நிபந்தனை. எந்த வித ஏற்பாடும் இல்லாமல் வேலைக்குப் போவதா? பயணம்
மேற்கொள்வதா? சரியாகப் படவில்லையே. இப்படிச் சொல்ல வைக்கிறது, நாம் வாழும் காலம். உண்பதற்கு,
உடல் பயிற்சி செய்வதற்கு, ஏன்?... தூங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று
கட்டாயப்படுத்தும் 'management' காலத்தில் வாழும் நமக்கு, இயேசு சொல்லும் இந்த நிபந்தனையைக்
கேட்டு சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை. நமது பயணங்களை எண்ணிப் பார்ப்போம். நான்
இப்போது வாழும் உரோமை நகரில் உல்லாசப் பயணிகள், திருப்பயணிகள் என்று வருடம் முழுவதும்
கூட்டம் அலை மோதும். அந்தக் கூட்டத்தில் சிறுவர், சிறுமிகளை நான் பார்த்திருக்கிறேன்.
அவர்களிடமும் ஒரு பெட்டி. சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்தப் பெட்டியை அவர்கள் இழுத்துக்
கொண்டு செல்வதைப் பார்த்து இரசித்திருக்கிறேன். இது நமது இன்றைய நிலை. பள்ளிக்குச் செல்லும்
நம் குழந்தைகளையும் எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் சுமக்கும் பாரங்கள்... பாவம். இதற்கு
நேர் மாறாக, இந்த 21ம் நூற்றாண்டில் சிலர், மிகச் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். எங்கள்
முன்னாள் இயேசு சபைத் தலைவர் உலகம் முழுவதும் பயணங்கள் மேற்கொண்டார். அந்தப் பயணங்களிலெல்லாம்
அவர் கொண்டு சென்றது ஒரு சின்னப் பைதான். இயேசு இன்றைய நற்செய்தியில் அந்தச் சின்னப்
பைகூட தேவையில்லை என்று சொல்கிறார். நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு நிபந்தனை. ஆனால், அன்பர்களே,
ஆர அமர, ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும். நாம்
எல்லாருமே இந்த உலகத்தில் வழிபோக்கர்கள் தான். போகும் வழியில் நாம் சேகரித்தவைகளை அதிகரித்துக்
கொண்டே போனால், இறுதியில்... என்னச் செய்யப் போகிறோம்? நம் இறுதிப் பயணத்தின் போது, இயேசுவின்
இந்த வார்த்தைகளை முற்றிலும் பின்பற்ற வேண்டியிருக்குமே. அந்தப் பயணத்திற்கு முன்னேற்பாடாக
இப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ளலாமே! இயேசுவுக்கு இது எளிதாகலாம்.
ஏனெனில் அவரிடம் சொத்து என்று ஒன்றுமே இல்லை. ஆனால், உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று,
ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் இதே கருத்தைத் தானே தன்
இறுதி மூன்று ஆசைகளாகச் சொல்லிச் சென்றார். அதிலும் சிறப்பாக, தனது இறுதிப் பயணத்தில்
தனது வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும் படி வைக்கச் சொன்னது நமக்கு
ஒரு பாடம்தானே.
வெறும் கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம்
என்று கூறும் இயேசு கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இடத்தில் எல்லாம் சமாதானம்
என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இது அவரது மூன்றாவது நிபந்தனை.
இயேசுவின்
அழைப்பை ஏற்று, உழைக்க முன்வந்து விட்டால், அவரது அரசை விதைத்து, அறுவடை செய்ய துணிந்து
விட்டால்... ஓநாய்கள் நடுவிலும் துணிவோடு செல்ல வேண்டும், அந்தத் துணிவு, இறை நம்பிக்கையிலிருந்து
வர வேண்டும், இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும் சுமந்து சென்றால் போதும், வேறெதுவும் வேண்டாம்,
அந்த நம்பிக்கையை, அதன் பயனாய் உணரும் சமாதானத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்... இவைகளே
இந்த உழைப்புக்குத் தேவையான நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளை நமது வாழ்வாக்க, பணியாக்க
நிபந்தனைகள் இன்றி அருள் வழங்கும் இறைவன் துணை செய்வாராக.