200 கோடி செல்லிடப் பேசி இணைப்புகள் சென்ற நான்கு ஆண்டுகளில் பலுகி உள்ளன - ஐ.நா.
அறிக்கை
ஜூன்24,2010 200 கோடி செல்லிடப் பேசி இணைப்புகள் சென்ற நான்கு ஆண்டுகளில் பலுகி உள்ளன
என்றும், இவற்றில் பெரும்பாலான இணைப்புகள் வளரும் நாடுகளில் காணப்படுகின்றன என்றும் ஐ.நா.
அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐ.நா.வின் தொலைத் தொடர்பு ஒன்றியம் இப்புதனன்று வெளியிட்ட
ஓர் அறிக்கையில் இந்த இருநூறு கோடி இணைப்புகளில் ஏறத்தாழ 160 கோடி இணைப்புகள் ஏழ்மை நாடுகளில்
காணப்படுகின்றன என்றும், பொதுவாகவே உலகில் பாரம்பரியத் தொலைபேசித் தொடர்புகள் குறைந்து
வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளில்
90 விழுக்காடு கிராமங்கள் செல்லிடப் பேசி இணைப்புக்களைப் பெற்றுள்ளன என்று கூறும் இவ்வறிக்கை,
உலகில் உள்ள குடும்பங்களில் 75 விழுக்காடு மக்கள் தொலைக்காட்சி இணைப்புகள் பெற்றுள்ளனர்
என்றும், 25 விழுக்காட்டினரே கணணி வழி இணையதள இணைப்புகள் பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறது.வளர்ந்துள்ள
நாடுகளில் மூன்றில் இரு பகுதி மக்கள் இணையதளம் மூலம் தொடர்புகளை பலப்படுத்தி வரும் வேளையில்,
வளரும் நாடுகளில் இன்னும் ஐந்தில் ஒரு பகுதிக்கும் கீழான மக்களே இந்த வசதியைப் பெற்றுள்ளனர்
என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.