துடிப்பான இளைஞன் ஒருவன் சென் குரு ஒருவரைத் தன் அறிவால் மடக்கிவிட எண்ணினான். வண்ணத்துப்
பூச்சி ஒன்றைப் பிடித்து, அதைத் தன் கைக்குள் மறைத்துக் கொண்டு, கைகளைப் பின் புறமாய்
வைத்தபடி, குருவுக்கு முன் சென்று, "குருவே, என் கையில் உள்ள வண்ணத்துப் பூச்சி உயிருடன்
உள்ளதா? இறந்து விட்டதா?" என்று கேட்டான். வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டதென்று
குரு சொன்னால், அவர் கண் முன்பாகவே அதைப் பறக்க விடலாம்; மாறாக, பூச்சி உயிருடன் உள்ளதென்று
சொன்னால், அதைக் கைக்குள்ளேயே நசுக்கி, இறந்த வண்ணத்துப் பூச்சியின் உடலைக் காண்பிக்கலாம்
என்று இளைஞன் எண்ணிக் கொண்டிருந்தான். குரு அவனிடம், "இந்தக் கேள்விக்குப் பதில் உன்
கையில் தான் உள்ளது." என்றார்.வண்ணத்துப் பூச்சி மட்டுமல்ல... வாழ்வின் பல கேள்விகளுக்குப்
பதில் நம் கையில் தான் உள்ளது.