பாகிஸ்தானில் இலவச HIV சோதனைகளை வழங்க முன்வந்துள்ளது லாகூர் பெருமறை மாவட்டம்.
ஜூன் 15, 2010. பாகிஸ்தானில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில்
கொண்டு, இலவச HIV சோதனை மற்றும் உதவி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளது அந்நாட்டின்
கத்தோலிக்க லாகூர் பெருமறை மாவட்டம். எய்ட்ஸ் நோயை ஒழிக்க உதவும் நோக்குடன் தலத்திருச்சபையால்
துவக்கப்பட்டுள்ள இந்த இலவசத்திட்டம் குறித்து மக்கள் அனவருக்கும் தெரிவித்து அவர்கள்
பயன்பெற உதவுமாறு கத்தோலிக்கர்களை விண்ணப்பித்தார் இதனை அறிமுகப்படுத்திய குரு பெர்னார்டு
பாட்டி. 864பேர்களே இக்கிருமிகளால் அல்லது நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு
அறிவித்துள்ளது தவறானத் தகவல் என உரைத்த இக்குரு, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை
இந்நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐ.நாவின் கணிப்பை மேற்கோள் காட்டினார். எய்ட்ஸ்
நோயாளிகளை சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலையும், அவர்கள் குறித்தத் தவறான முன்சார்பு எண்ணங்களும்,
போதிய நிதியுதவிகள் இன்மையும் இந்நோய்க்கான ஆரம்ப காலச் சிகிச்சைகளுக்குத் தடையாக இருக்கின்றன
என்ற கவலையையும் வெளியிட்டார் குரு பெர்னார்டு.