ஏழ்மையை அகற்றும் புதிய ஆயுதமாக உலகமயமாக்கலைப் பயன்படுத்த பேராயர் மெர்க்கத்தோ அழைப்பு.
ஜூன் 15, 2010. நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக் கோட்பாடுகளினால்
வழிநடத்தப்படும் உலகமயமாக்கலே மோதல்களைக் களைவதோடு அமைதிக்கூறாகவும் செயல் பட முடியும்
என்றார் குடியேற்றதாரர்க்கானத் திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகுஸ்தினோ மர்க்கெத்தோ.
அமைதி,
ஒப்புரவு மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் இங்கிலாந்தில் இடம்பெறும் கருத்தரங்கிற்குச்
செய்தி அனுப்பிய பேராயர், சமூகச்சீர்கேட்டிற்கும் மோதல்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை
அதில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகமயமாக்கல் என்பது, தன்னிலையில் அமைதியைக் கட்டியெழுப்ப
உதவுவதில்லை மாறாக பிரிவினைக்கும் மோதல்களுக்குமே இட்டுச்செல்கின்றது என்றார். ஏழ்மைக்கு
எதிரானப் போராட்டத்திற்கான புதியக் கருவியாக உலகமயமாக்கல் பயன்படுத்தப்படவேண்டும் எனவும்
கேட்டுக்கொண்டார் பேராயர் மர்க்கெத்தோ.
பொருளாதார வளர்ச்சிக்கான ஒன்றிணைந்தக்
கொள்கைகளுடன் நீதியானத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டிய சர்வதேசச் சமூகத்தின்
கடமையையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் .
ஐரோப்பிய பல்கலைக்கழங்களில்
பணியாற்றும் ஆன்மீகக்குருக்களினால் இங்கிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு
மனித உரிமை மற்றும் மாண்பு குறித்தவைகளில் இளைஞர்களின் சமூக அர்ப்பணம் குறித்து விவாதிக்கின்றது.