தென்னாப்ரிக்க கத்தோலிக்கத் திருச்சபை உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான சர்வதேச
கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது
ஜூன் 11,2010 உலகிலுள்ள எல்லா தென்னாப்ரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும்
நோக்கத்தில் ஜொகானஸ்பர்க்கில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான அமைதி கால்பந்து
போட்டியை நடத்தி வருகிறது தலத்திருச்சபை.
இவ்வெள்ளியன்று தென்னாப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில்
19-வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ளவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை
அதற்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருவது குறித்துப் பேசிய திருச்சபை
அதிகாரி ஒருவர், இதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உலகிலுள்ள எல்லாத் தென்னாப்ரிக்கர்களையும்,
சிறப்பாக, இந்த உலக நிகழ்வில் ஓரங்கட்டப்பட்டுள்ளோரை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இதனை நடத்துவதாகத்
தெரிவித்தார், தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்தின் Antoine
Soubrier.
கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் இந்த அமைதிக் கால்பந்து போட்டி, பன்னாட்டுக்
கூறைக் கொண்டுள்ளது என்றும், இம்மாதம் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும்
சுமார் 15 நாடுகளின் 64 விளையாட்டு வீரர்கள் ஜொகானஸ்பர்க் நகரின் ஏழைகள் வாழும் பகுதியில்
விளையாடுவார்கள் என்றும் Soubrier தெரிவித்தார்.
இது, தென்னாப்ரிக்கர்கள் ஒருவரையொருவர்
அறிய வாய்ப்பாக அமைகின்றது என்றும் அவர் கூறினார்.
ஜூன் 11, இவ்வெள்ளி மாலை தொடங்கியுள்ள,
உலககோப்பை கால்பந்து போட்டி, ஜுலை 11ம்தேதி வரை நடக்கும். இத்துவக்க விழாவில் சுமார்
1,500 கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன