ஜூன்03,2010 மத்தியக்கால கிறிஸ்தவக் கலாச்சாரத்தைப்பற்றிய இன்றைய நம் மறைக்கல்வி போதனையில்,
கிறிஸ்தவ சமூகங்களுக்கான மறை வல்லுனர் என அறியப்படும் புனித தாமஸ் அக்வினாஸ் குறித்து
நோக்குவோம் என இவ்வார புதன் பொது மறைப்போதகத்தை துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித அக்வினாசின் வாழ்வும்
போதனைகளும் எப்போதுமே இறையியலாளர்களுக்கான மிக உன்னத எடுத்துக்காட்டாக போற்றப்பட்டு வருகின்றன.
புனித தாமஸ் அக்வினாஸ் நேப்பிள்ஸ் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த போது அக்காலத்தில்
அப்போதுதான் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிஸ்டாட்டிலின் எழுத்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவரின் கல்விப் புலமை வாழ்வின் பெரும்பகுதி, அரிஸ்டாட்டில் என்ற தத்துவ ஞானியின் உண்மை
போதனைகளைக் கற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்பதாய், அதன் செல்லுபடியான கூறுகளைக் கண்டுகொள்வதாய்,
அந்த மதிப்பீடுகளை கிறிஸ்தவச் சிந்தனைகளில் வெளிப்படுத்துவதாய் இருந்தது. புனித அக்வினாஸ்
'போதகர் சபை' எனப்படும் தொமினிக்கன் சபையில் இணைந்து புனித பெரிய ஆல்பர்ட்டின் கீழ் கல்வி
பயின்று, கொலோன், பாரீஸ், உரோமை மற்றும் நேப்பிள்ஸில் இறையியலைக் கற்பித்தார். அவரின்
எண்ணற்ற விளக்க உரைகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட எழுத்துக்களின் நடுவே, Summa Theologica
எனப்படும் அவரின் இறையியல் கோட்பாடானது அவரின் திறனாய்வுத் திறமை எனும் கொடையையும், விசுவாசத்திற்கும்
பகுத்தறிவு வாதத்திற்குமிடையேயான இயற்கையான இணக்கம் பற்றிய அவரின் உறுதியான நம்பிக்கையையும்
வெளிப்படுத்தி நிற்கிறது. அப்போது புதிதாக இருந்த இயேசுவின் திரு உடல் திருவிழாவிற்கான
திருவழிபாட்டுப் பகுதியை எழுதியவர் இவரே. இதில் இவர் எழுதிய திருப்பலிப் பாடல்கள் இவரது
திருநற்கருணை மீதான இவரின் அழமான விசுவாசத்தையும் இறையியல் ஞானத்தையும் காட்டி நிற்கின்றன.
இறைவனின் அழகு மற்றும் முடிவற்ற பெரும் மாட்சியோடு ஒப்பிடும்போது தான் எழுதியவையெல்லாம்
ஒரு தூசுக்குச் சமம் என்பதை ஒரு மெய்யுணர்வு அனுபவத்தின் மூலம் உறுதியாக நம்பிய பிறகு
தன் கடைசிக் காலத்தில் எழுதுவதையே விட்டுவிட்டார் புனித தாமஸ் அக்வினாஸ். இனி வரும் நம் புதன் மறைபோதனைகளில்
இம்மிகப்பெரும் இறையியலாளரின் சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் குறித்து ஆழமாக ஆராய்வோம்
என தன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்
அளித்தார்.