மே 31, 2010. ஆந்திர பிரதேச மாநில அரசுக்கும் அம்மாநிலக் கிறிஸ்தவ சபைகளுக்கும்
இடையே நிலவி வரும் உறவு குறித்து மாநில முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்
ஆந்திர ஆயர்கள்.
புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு
பயணச்சீட்டில் சலுகை காட்டுதல், கோவில் கட்டுவதற்கான நீதிமன்றங்களின் தடைகளை ஆராய்தல்,
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆந்திர
மக்களுக்கு 3000வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில் திருச்சபைக்கு அரசின் ஆதரவு ஆகியவை குறித்து
முதல்வர் றோசய்யாவுடன் விவாதித்தனர் ஆயர்கள்.
தலித் கிறிஸ்தவர்களை மிகவும் தாழ்த்தப்பட்ட
சமூகமாக அறிவிக்கும் மசோதாவை பாராளுமன்றத்தின் வரும் தொடரில் கொணரவேண்டும் என பிரதமர்
மன்மோகன் சிங்கை வலியுறுத்துமாறும் மாநில முதல்வரை விண்ணப்பித்தனர் ஆயர்கள்.
ஆந்திர முதல்வரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கென ஆந்திர அரசு ஆற்றிவரும் பணிகளைக் கோடிட்டுக்
காட்டியதோடு, சிறுபான்மை சமுதாய மேம்பாடு என்ற அடிப்படையில் கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு
நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதற்கும் உறுதி கூறினார்.