பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்
மே22,2010 : பள்ளிக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் அறுபதாயிரம் தமிழ் மாணவ, மாணவிகள்
தவித்து வருகின்றனர் என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முக்கிய
எதிர்க்கட்சி தலைவருமான டி.எம். சுவாமிநாதன் கூறினார்.
விடுதலைப்புலிகளுடனான
போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால் வன்னி உள்ளிட்ட வடக்கு
இலங்கைப் பகுதியில் பள்ளிகள் சரிவர நடைபெறுவதில்லை என்று சுவாமிநாதன் மேலும் கூறினார்.
இலங்கையின்
வடக்குப் பகுதியில் மொத்தம் 300 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது
செயல்பட்டு வருகின்றன. இங்கு 86 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது வெறும் 26 ஆயிரம் சிறுவர்கள் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது என்றார் அவர்.
அங்குள்ள
பள்ளிகள் திறக்கப்படாததால் எஞ்சியுள்ள சுமார் 60 ஆயிரம் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்ல
முடிவதில்லை. இலங்கை அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து பள்ளிகளைத் திறக்கவேண்டும்
என்று சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பகுதிகள் போருக்கு முன்பு விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த நிலையில் போரில் வெற்றி பெற்றதையடுத்து இப்பகுதி
முழுவதும் இலங்கை இராணுவத்தின் வசம் வந்துவிட்டது.
மேலும் போரின்போது வன்னிப்பகுதியில்
60,900 வீடுகள் நாசமாக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.
வீடிழந்துள்ள தமிழர்களுக்கு, தமிழ் வம்சாவளியினர் வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு வீடுகளைக் கட்டித்
தர ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார்.