கர்தினால் டயஸ் - திருச்சபையின் கோட்பாடுகள், நன்னெறி விதிமுறைகள், பக்தி ஆகியவற்றைக்
கடைபிடிக்கும் அருட்பணியாளர்களும் மறைபோதகர்களும் தேவை
மே19,2010 கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகள், நன்னெறி விதிமுறைகள், பக்தி ஆகியவற்றைக்
கடைபிடிக்கும் அருட்பணியாளர்களும் மறைபோதகர்களும் தேவைப்படுகிறார்கள் என்று திருப்பீட
விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ் கூறினார்.
திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அறிவித்த, சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டு நிறைவுக்கு வரும் இவ்வேளையில்
உலகிலுள்ள அனைத்து அருட்பணியாளர்கள் மற்றும் மறைபோதகர்களுக்கு இவ்வழைப்பை முன்வைத்தார்
கர்தினால் டயஸ்.
உரோமையில் பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்தும் பொது அவையில்
உரையாற்றிய கர்தினால் டயஸ், ஒவ்வோர் அருட்பணியாளரும் மறைபோதகரும் தங்களது வாழ்விலும்
பணியிலும் கடைபிடிக்க வேண்டிய தனித்துவம் மற்றும் பண்புநலன்கள் குறித்துப் பேசினார்.
ஒவ்வோர்
அருட்பணியாளரும் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தான் ஒரு கடவுளின் மனிதன் என்பதை நினைவில்
இருத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
அருட்பணியாளர்கள் உலகில் இருந்தாலும் உலகைச்
சார்ந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொண்டு திருச்சபையின் கோட்பாடுகள், நன்னெறி விதிமுறைகள்,
பக்தி ஆகியவற்றில் நிலைத்திருக்குமாறும் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர்
கர்தினால் ஐவன் டயஸ் கேட்டுக் கொண்டார்.