அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தார் மார்ட்டின் லூத்தர்
கிங். ஆங்காங்கே வெள்ளையர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார். ஒருநாள் ஒரு பொதுக்கூட்டத்தில்
உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, செருப்பு ஒன்று அவர் மேல் வந்து விழுந்தது. கூட்டத்தில்
ஒரே பரபரப்பு. என்ன நடக்கப் போகிறதோ என்று. அந்தச் செருப்பைக் கையிலெடுத்துக் கொண்ட அவர்,
புன்முறுவலுடன் சொன்னார்- யாரோ ஒருவர் அன்பளிப்பாகச் செருப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இன்னொன்றையும் அனுப்பி வைத்தால் போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும் என்று. பெரியோர் சொல்கிறார்கள்
– வசவுகளை வசமாக்கிக் கொள். வாழ்க்கை உன் வசப்படும் என்று