ஏப்ரல்30,2010 திருவழிபாடு மற்றும் திருவருட்சாதன பேராயத்தின் முன்னாள் தலைவர் மற்றும்
எக்ளேசியா தேய் (“Ecclesia Dei”) என்ற திருப்பீட அவையின் முன்னாள் தலைவருமான கர்தினால்
பால் அகுஸ்தீன் மேயெர் (Paul Augustin Mayer) இவ்வெள்ளி காலை இறைபதம் அடைந்ததை முன்னிட்டு
இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெனடிக் துறவு சபையைச்
சேர்ந்த கர்தினால் மேயெர் மரணமடைந்ததை முன்னிட்டு பெனடிக்ட துறவு சபை அதிபருக்குத் தந்திச்
செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் மேயெர், துறவி என்ற வகையில் தனது அழைப்புக்கு
மிகவும் பிரமாணிக்கமாய் வாழ்ந்தவர், நற்செய்திக்கும் திருச்சபைக்கும் மிகவும் விசுவாசமான
மேய்ப்பராக வாழ்ந்து பணியாற்றியவர் என்று பாராட்டியுள்ளார்.
கர்தினால் மேயெர்
ஜெர்மனியின் பவேரியாவில் ஆல்டோட்டிங்கில் (Altötting) 1911ம் ஆண்டு மே 23ம் தேதி பிறந்தவர்.
1935ல் குருவான இவர், 1949ம் ஆண்டிலிருந்து 1966 ம் ஆண்டு வரை புனித ஆன்செல் பாப்பிறை
இறையியல் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருக்கின்றார். திருத்தந்தை 2ம் ஜான் பவுலால்
1985ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
இவரின் அடக்கச்சடங்குத் திருப்பலி
மே3ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெறும்.
இக்கர்தினாலின்
இறப்பையொட்டி 180 கர்தினால்களைக் கொண்ட கர்தினால்கள் குழுவில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 108 ஆகியது.