ஏப்ரல்23,2010 கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் வளர்ந்து வரும் வன்முறைகளில் பலர் உயிரிழந்திருப்பதையும்,
இன்னும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்திருப்பதையும் குறித்து அங்குள்ள தலத் திருச்சபை
தன் கவலையை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தில் பல்வேறு அரசியல் எண்ணங்களும், பலவிதக்
குழுக்களும் இருந்தாலும் இவைகள் நமது எதிரிகள் அல்ல, மாறாக, நம்மிடையே உள்ள வெறுப்பும்
கோபமுமே நமக்கு எதிரிகள் என்று தாய்லாந்தின் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Chamniern Santisukniran
கூறினார்.
இவ்வியாழனன்று பாங்காக்கில் நடைபெற்று வரும் மக்கள் பணி கருத்தரங்கில்
கலந்து கொள்ள வந்திருக்கும் ஆயர்கள், குருக்கள், கன்னியர் ஆகியோருக்கு உரையாற்றுகையில்
பேராயர் இவ்வாறு கூறினார்.
அரசியல் தீர்வு காண செபங்களும், பேச்சுவார்த்தையும்
பெரிதும் உதவும் என்று கூறிய பேராயர், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி அளவில் அந்நாட்டில்
உள்ள கோவில்களில் நாட்டின் அமைதிக்கான சிறப்பு செப வழிபாடுகள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.