நேற்று வேலை முடிந்து நகரப் பேரூந்தில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது
ஒரு நிறுத்தத்தில் பயணிகள் இறங்க வேண்டியிருந்தது. பயணிகள் இறங்க வேண்டிய மையப் பகுதி
கதவை ஓட்டுனர் திறக்காமல் இருந்தார். இங்கு இத்தாலியில் பேரூந்துகளில் ஓட்டுனர் மட்டுமே
இருப்பார். அப்பொழுது மூன்று பயணிகள் “திற, திற” என்று சத்தமாகச் சொன்னார்கள். ஓட்டுனரும்
கதவைத் திறந்தார். அச்சமயம் பேரூந்தில் ஏறிய ஒரு வயதான இத்தாலிய பெண், என்ன இது, தயவு
செய்து திறங்கள் என்று கேட்காமல் இப்படி கேட்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மாதிரி கேட்கும் முறை மறைந்து வருகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஏனெனில்
இங்கு பொதுவாக தயவு செய்து, நன்றி போன்ற வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
திற திற என்று சத்தமாகக் கேட்டவர்கள் இத்தாலியர்கள் அல்ல. ஒருவேளை அவர்களுக்கு மொழிப்
பிரச்சனையாகக்கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் எதையும் கேட்பதற்குப், பேசுவதற்கு என்று
ஒரு பாங்கு இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பதே அழகாகும். மாற்ற வேண்டியதை மாற்று. மாற்றத்
தேவையில்லாததை விட்டுவிடு. இரண்டையும் இனம்காண கடவுளிடம் மன்றாடு.