2010-04-20 16:38:05

விவிலியத் தேடல்


“தன்னைப் படைத்தவனைக் கண்டதும்,
தண்ணீர் நாணம் கொண்டு சிவந்தது.”
“The conscious waters saw their Creator and blushed.”
ஆங்கிலக் கவி ஒருவர் கானாவூர் திருமணத்தைப் பற்றிக் கூறிய வரிகள் இவை. யாரிந்த கவிஞர்? John Dryden, Lord Byron, Alexander Pope என்று பல்வேறு கவிஞர்கள் இந்த இரு வரிகளை எழுதியதாகச் சொல்லப்படுகிறது. யார் எழுதினார் என்பது அவ்வளவு முக்கியமல்ல.
எத்தனையோ உலகப் புகழ்பெற்ற கவிதைகளை யார் எழுதினார்கள் என்பதில் ஒன்றுக்கொன்று முரண்பாடான பல விவரங்கள் உள்ளன. நாம் அதிகம் போற்றும் திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்று எளிதில் சொல்லிவிடுகிறோம். ஆனால், அந்தத் திருவள்ளுவர் யார் என்பதில்தான் எத்தனை வேறுபட்ட கருத்துக்கள்.
விவிலியத்திலும் பல நூல்களுக்கு தனிப்பட்ட ஒருவரை ஆசிரியராகக் கூறிவிட முடியாது. இப்போது விவிலியத் தேடல்களில் நாம் சிந்தித்து வரும் இந்த திருப்பாடல்கள் தாவீதால் எழுதப்பட்டதென பொதுவாகக் கூறுகிறோம். ஆனால், தாவீது மட்டும் இந்த நூலின் ஆசிரியர் இல்லை. இந்நூலில் உள்ள அதிகமான திருப்பாடல்களை தாவீது எழுதினார் என்றாலும், மோசே, சாலமோன் என்ற பிற ஆசிரியர்களும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கவிதைகளை எழுதியது யார் என்பதை விட, அவற்றில் சொல்லப்பட்டுள்ள எண்ணங்கள், அவை சொல்லப்பட்டுள்ள அழகு... இவைகளே முக்கியம். கானாவூரில் இயேசு ஆற்றிய முதல் புதுமையைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஏன், நாமே சில மாதங்களுக்கு முன், வத்திக்கான் வானொலியில் மூன்று நிகழ்ச்சிகளாக இந்தப் புதுமை பற்றி சிந்தித்திருக்கிறோம்.
அந்த மூன்று நிகழ்ச்சிகளையும் ஒரு சேர இணைத்தால், ஒரு 30 நிமிடங்கள் நான் பேசியிருப்பேன். ஏறத்தாழ 10 அல்லது 12 பக்கங்கள் அந்த சிந்தனைகள் கட்டுரை வடிவில் வந்திருக்கும். நான் சொன்ன வரிகள் எனக்கே அதிகம் நினைவில்லாத போது, அதை ஒரு முறை கேட்ட உங்களுக்கு அந்த வரிகள் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. கட்டுரைகளில் பக்கம் பக்கமாய் சொல்லப்பட்டுள்ள கானாவூர் புதுமையை, இரு வரிகளில் இந்தக் கவிதை அழகாகச் சொல்லியுள்ளது.
“தன்னைப் படைத்தவனைக் கண்டதும்
தண்ணீர் நாணம் கொண்டு சிவந்தது.”
“The conscious waters saw their Creator and blushed.”
கட்டுரைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் பதியலாம். ஆனால், வரி வரியாக கட்டுரைகள் மனதில் பதிய அதிகம் வாய்ப்பில்லை. கவிதைகளுக்கு அந்த சக்தி உண்டு. கவிதைகளின் சொல் நயம், எதுகை மோனை என்று வெளிவரும் சந்த நயம், கவிதை வரிகளில் காணக் கிடக்கும் கற்பனை வளம்... இவைகளே, கவிதைகளுக்கு இந்தச் சக்தியைத் தருகின்றன.
"பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்..." என்று ஆரம்பிக்கும் மகாகவி பாரதியாரின் பாடலை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். நான் சொல்லும் இந்த சக்தியைப் புரிந்து கொள்வீர்கள். நம் நாட்டைக் குறித்த பல கனவுகள் பக்கம் பக்கமாய் கட்டுரைகளாய், மேடைப் பேச்சுக்களாய் வெளி வந்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டைக் குறித்த அத்தனை கனவுகளையும் பாரதி அந்தப் பாடலில் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதிலும் சிறப்பாக நம் நாட்டை ஒருமைப்படுத்தும் ஒரு கனவாக மகாகவி சொன்ன "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்று ஆரம்பிக்கும் வரிகள் எத்தனை எண்ணங்களை, உணர்வுகளை மனதில் விதைக்கின்றன!
கவிஞர்கள், கவிதைகள் என்று பேச ஆரம்பித்தால், நாம் பேச வேண்டிய திருப்பாடல்கள் நம் சிந்தனைகளில் பின் தங்கி விடும். இன்று, திருப்பாடல்களில் உள்ள கவி நயம் பற்றி சிந்திப்பதே நம் முக்கிய பணி. அதற்கு முன், விவிலியத்தில் கவிதை என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

விவிலியத்தில் பல இலக்கிய வடிவங்கள் உள்ளன. வரலாறு, கவிதைகள், பழமொழி, கற்பனைக் கதைகள்... என்று பல வடிவங்கள். இவை தனித் தனி வடிவங்களாய் இல்லாமல், ஒன்றோடொன்று கலந்து காணப்படுகின்றன. திருப்பாடல்கள் என்ற இந்த நூல் முழுவதும் கவிதைகள் மட்டுமே உள்ளன.
விவிலியத்தில் கவிதைகள் உள்ளன என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் பேசப்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. விவிலியம் கடவுளின் வெளிப்பாடு, கடவுளின் வார்த்தைகள் அடங்கிய நூல் என்ற எண்ணம் மிக அதிகம் வலுப் பெற்றிருந்ததால், விவிலியத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதையே அதிகம் பேசினோம், சிந்தித்தோம். எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய சிந்தனைகள் மிகக் குறைவு. சொல்லப்பட்டுள்ள விஷயம் (Matter) தான் முக்கியம், சொல்லப்பட்ட வடிவம் (Form) முக்கியமல்ல என்ற எண்ணமே அதிகம் வலுவடைந்திருந்ததால், செய்யுள், கவிதை என்ற வடிவத்தைப் பற்றி அதிக சிந்தனைகள் எழவில்லை.
2வது காரணம்: பிற கவிதைகளைப் போல் எபிரேயக் கவிதைகள் வார்த்தை விளையாட்டுகளில், வடிவங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எபிரேயக் கவிதைகளில் எண்ணங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, அந்தக் கவிதைகளை, கவிதைகள் என்று புரிந்து கொள்வதே கடினமாய் இருந்தது. எபிரேய கவிதைகளுக்கென தனித்துவம் பல உண்டு. நாம் இரு அம்சங்களைச் சிந்திப்போம்.

முதல் அம்சம்: வார்த்தைகளுக்குத் தரப்படும் முக்கியவத்துவத்தைக் காட்டிலும் எண்ணங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம். இரண்டாவது அம்சம்: எபிரேயக் கவிதைகளில் உருவகங்களின் பயன்பாடு. வழக்கமாக, பல மரபு கவிதைகளில் சொல்லப்பட்டுள்ள வரிகளில், வார்த்தைகளில் அழகு நயம், ஒப்புமைகள் இருக்கும். உதாரணமாக,
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்துப் பாயுது காதினிலே
என்ற வரிகளில், போதினிலே, காதினிலே என்பவை ஒன்றையொன்று ஒத்தச் சொற்கள். இது போன்று, எதுகை, மோனை என்று வார்த்தைகளில், வரிகளில் உள்ள ஒப்புமைகளுக்குப் பதில், எபிரேயக் கவிதைகளில் எண்ணங்களில் ஒப்புமைகள் இருக்கும். ஒரே எண்ணத்தை வலியுறுத்தியோ, அல்லது மறுத்தோ இருவேறு வழிகளில் சொல்லும் அழகைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக, திருப்பாடல் 24ல் உள்ள முதல் வரிகளைப் பார்க்கலாம். இறைவனுக்கு இந்த உலகம் சொந்தம் என்பதை முதல் இரு வரிகள் வெவ்வேறு வழிகளில் சொல்கின்றன. அடுத்த வரிகளில், இறைவன் இந்த உலகை, தண்ணீர் மீது நிலை நிறுத்தினார் என்பதை இருவேறு வழிகளில் பாடலாசிரியர் கூறியுள்ளார். அந்தத் திருப்பாடலின் வரிகள் இதோ:
திருப்பாடல் 24: 1-2
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை:
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்:
ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே. 
இதேபோல் திருப்பாடல் 49ன் முதல் இருவரிகள் ஒரே எண்ணத்தை இருவேறு வழிகளில் சொல்லும் அழகைக் காணலாம்.

திருப்பாடல் 49: 1
மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்:
மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். 
ஒரே எண்ணத்தை இரு வழிகளில் வலியுறுத்திச் சொல்வதற்கு இவை எடுத்துக் காட்டுகள். ஒரே எண்ணத்தின் எதிர்மறைகளை தொடர்ந்து இருவரிகளில் சொல்லும் அழகையும் திருப்பாடல்களில் காணலாம். திருப்பாடல் 1: 6 ல் கூறப்பட்டுள்ளது இது:

நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்:
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். 
இந்த முதல் திருப்பாடல் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படும் எபிரேயக் கவிதைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தத் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், கல் மேல் கல் வைத்துக் கட்டப்படும் கட்டிடம் போன்று ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும். ஒவ்வொரு எண்ணமும் முந்தைய எண்ணத்தை உறுதிப்படுத்தும். அல்லது எதிர்மறையாய்ச் சொல்லி, சொல்லவந்த கருத்தை ஆழப்படுத்தும்.

இப்படி, எபிரேயக் கவிதைகளில் வார்த்தைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்திற்கு மேலாக, எண்ணங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அதிகம்.

எபிரேயக் கவிதைகளுக்கு உரிய மற்றொரு தனித்துவம் உருவகங்களைப் பயன்படுத்துதல். நமது தமிழ் மரபுக் கவிதைகளில், அல்லது நமதுப் புதுக் கவிதைகளில் நாம் பயன்படுத்தும் உருவகங்கள், கற்பனை வளத்துடன் இருக்கும்.
மாட்டைக் குடிலில் குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் மகிழ்வோடு காணும் கனவைக் கூறும் ஒரு பாடலில் வரும் வரிகள் இவை:

மேகத்திலே பஞ்சு எடுத்து, மெத்தை ஒன்னு தச்சிடுவோம்.
நட்சத்திரப் பூப்பறித்து நாலு பக்கம் குத்திடுவோம்
தென்றலிலே சாமரங்கள் செய்து வந்து வீசுவோம்
தெய்வ மகன் தூங்கிடவே தேனிசையில் பாடுவோம் 
நடை முறைக்கு ஒருவேளை ஒவ்வாத கனவுகள் இவை. ஆனால், கற்பனை வளத்துடன் வலம் வருபவை.
இது போன்ற, இதையும் மிஞ்சிய நூற்றுக்கணக்கான கற்பனை வரிகள் திருப்பாடல் நூலில் அதிகம் உண்டு. ஆண்டவர் என் ஆயன் என்ற திருப்பாடல் 23ல் உள்ள கவிதை நயம் பலரும் உணர்ந்த ஒன்று.
திருப்பாடல்களில் உள்ள எபிரேயக் கவிதைகளின் அழகை அவ்வப்போது நாம் இந்த விவிலியத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம், மீண்டும் மீண்டும் ரசிப்போம்.







All the contents on this site are copyrighted ©.