திருச்சபை, எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் நம்பிக்கையின் செய்தியை அறிவித்து,
அதற்குச் சாட்சியாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது - திருத்தந்தை
ஏப்ரல்16,2010 திருச்சபை, எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் நம்பிக்கையின் செய்தியை
அறிவித்து, புனிதம் மற்றும் பிறரன்பு நிறைந்த தனது நடைமுறைச் செயல்கள் வழியாக அதற்குச்
சாட்சியாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Papal
Foundation என்ற பிறரன்பு அமைப்பின் 120 உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில்
சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த அமைப்பு வளரும் நாடுகளுக்குச் செய்து வரும் உதவிகளுக்கு,
குறிப்பாக, திருச்சபையின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கு ஆற்றி வரும் சேவைகளைப்
பாராட்டினார்.
உலகின் பல இடங்களில் மறைமாவட்டங்கள் மற்றும் துறவற சபைகளின் மறைப்பணிகளுக்கு
இவ்வமைப்பு செய்து வரும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Papal Foundation என்ற திருச்சபையின் பிறரன்பு
அமைப்பு உலகின் ஏழைகள், நோயாளிகள், அகதிகள், குடியேற்றதாரர் மற்றும் பல்வேறு இயற்கைப்
பேரிடர்களால் பாதிக்கப்படவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இன்னும், சேதமடைந்த ஆலயங்கள்,
குருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவைகளை மீண்டும் கட்டி எழுப்பவும் உதவி செய்து
வருகிறது.