ஏப்ரல் 07. மரணத்திலிருந்து கிறிஸ்து வெற்றி வாகை சூடி மகிமையோடு உயிர்த்த கொண்டாட்டத்தைத்
தொடர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையில் இன்று இடம் பெறும் நம் புதன் பொது மறைபோதகம்
இயேசு உயிர்ப்பின் ஆன்மீக மகிழ்வைக்கொண்டுள்ளது என தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.
இந்த உயிர்ப்பானது, வரலாற்றில்
இறைவனின் வல்லமை பொருந்திய செயற்பாடுகளில் மிகவும் உன்னதமானதாகும். இது அனைத்து விதமான
கற்பனைகளையும் தாண்டி புலன்களுக்கு எட்டாத ரகசியமாகும். நம்பத்தகுந்த சாட்சியங்களால்
எடுத்துரைக்கப்பட்ட உண்மை நிகழ்வு இது. அச்சாட்சிகளே உலகின் முன் நற்செய்தியை எடுத்துரைக்கும்
தூதர்களாக மாறினார்கள். சிலுவையில் அறையுண்டு உயிர்த்த யேசுவின் நற்செய்தி ஒவ்வொரு தலைமுறையிலும்
தொடர்ந்து புதிது புதிதாக அறிவிக்கப்பட்டு வரவேண்டும். விசுவசிப்பவர்கள் மீது உயிர்த்த
யேசு கொணர்ந்துள்ள புதிய வாழ்வின் வல்லமைக்கும் உண்மை நிலைக்கும் சாட்சி பகர கிறிஸ்துவின்
சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். புனித மாற்கு தன் நற்செய்தி
நூலின் இறுதியில் கூறுகிறார், "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அருளடையாளங்களால்
அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்" என்று.
உயிர்த்த கிறிஸ்து இன்றும்
நம்மோடு உடனிருந்து செயல்பட ஆவல் கொள்கிறார். அதன் மூலம் அவர் வார்த்தைகளை நம் வார்த்தைகளில்
சிந்தித்து அவர் அன்பின் வல்லமையை நம் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்த முடியும். இந்த
கிறிஸ்து உயிர்ப்பு விழா காலத்தில் இறைவனுடன் ஆன நம் தனிப்பட்ட உள்ளார்ந்த தொடர்பு
நம் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவைகளை ஆழப்படுத்தி "இயேசு உண்மையிலேயே உயிர்த்துவிட்டார்"
என்ற நற்செய்தியை நம் உதடுகளாலும் வாழ்வாலும் எடுத்துரைக்கத் தூண்டுவதாக என பொது மறைபோதகத்தை
வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.