தேர்தலில் அதிகமாக செலவழித்து பதவியைப் பிடிக்க முயலும் வேட்பாளர்கள் குறித்துக் கவனமாகச்
செயல்பட மணிலா கர்தினால் அழைப்பு.
மார்ச் 16, 2010. தேர்தலில் அதிகமாக செலவழித்து பதவியைப் பிடிக்க முயலும் வேட்பாளர்கள்
குறித்துக் கவனமாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பிலிப்பீன்ஸின் மணிலா
பேராயர் கர்தினால் கௌதன்ஸியோ ரொசாலெஸ்.
ஏழ்மையும் லஞ்ச ஊழலும் இன்றைய சமுதாயத்தை
பாதிக்கும் பெரும்பிரச்னைகள் என பிலிப்பீன்ஸின் 15 ஆயர்களுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ள
மேய்ப்புப்பணிச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள கர்தினால், மிரட்டல்களுக்கோ பணத்திற்கோ
அடிமையாகாமல், பொறுப்புடையத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் உதவ வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
கடவுளுக்கு
அஞ்சுபவர்களாக, ஒழுக்க நெறிமுறைகளை காப்பவர்களாக, தீமையை விட்டு விலகிச் செல்பவர்களாக,
வாழ்வை மதிப்பவர்களாக இருப்பவர்களையே தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என விண்ணப்பிக்கும்
மேய்ப்புப்பணிச் சுற்றறிக்கை, மக்கள் தங்கள் ஒற்றுமையை எக்காலத்திலும் விட்டுக் கொடுக்கக்
கூடாது எனவும் வேண்டுகிறது.