தவக்கால சிந்தனை எழுதி வழங்குபவர் அருள்தந்தை பவுல்ராஜ், சே.ச. ஒரு சிலருக்குச்
சின்னச் சின்ன ஆசைகள். மிகப் பலருக்கு பெரிய பெரிய ஆசைகள். இன்னும் பலருக்கு பேராசைகள்.
கோயிலுக்குச் சென்றாலோ அல்லது செபத்தில் இருந்தாலோ பலவிதமான கோரிக்கைகளை நாம் ஆண்டவர்முன்பாக
அடுக்கிக் கொண்டு தானே இருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நூற்றுவர் தலைவர் இயேசுவிடம்,
சாகும் தறுவாயில் இருக்கும் தனது மகன் சுகம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னுருத்துகிறார்.
குணமடைவான் என்று இயேசு உடனே சொல்லியிருக்கலாம். ஆனால் அது நூற்றுவர் தலைவரை பெரிய மாற்றத்திற்கு
அழைத்துச் சென்றிருக்காது. இயேசுவோ நூற்றுவர் தலைவரை இந்த நிகழ்வு வழியாகப் பெரிய மாற்றத்திற்கு
தயார் செய்கிறார். முடிவில் உம்மகன் பிழைத்துக் கொள்வான் என இயேசு சொல்ல அவரும் நம்பிச்
செல்கிறார். இயேசு சொன்ன அதே நேரத்தில் அவர் மகன் குணம் பெற்றதை நினைவு கூர்ந்து அவரும்
அவர் வீட்டாரும் இயேசுவை நம்பக் கூடிய அளவிற்குப் பெரிய மாற்றம் நிகழ்கிறது. நம் தேவைகள்
ஆண்டவரிடம் கேட்பதும் அது உடனடியாக நிகழ வேண்டும் என ஆண்டவரைக் கட்டாயப்படுத்துவதும்
நமது மனித எதிர்பார்ப்பு. ஆனால் எவ்வளவிற்கு நமது தேவைகள் இறைவனது திட்டத்திற்கு ஏற்புடையதாக
இருக்கிறது என நாம் தேர்ந்து தெளிவது கிடையாது.இன்றைய நற்செய்தி நம்மை இறைத்திட்டத்திற்கு
முழுமையாகக் கையளிக்க அன்போடு அழைக்கிறது. இயேசுவை கடவுளின் மகனாக ஏற்று அவரைச் சிக்கெனப்
பற்றிக் கொள்ள அவரை மட்டுமே நம்பி வாழ அன்புடன் அழைக்கிறது. இயேசுவை நம்புவோம். இறைத்திட்டத்தை
நமது வாழ்வில் நிறைவேற்றுவோம்.