2010-03-13 14:35:32

உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயம் செல்கிறார் திருத்தந்தை


மார்ச்13,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை சமூகத்தை இஞ்ஞாயிறு பிற்பகலில் சந்திப்பார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல், இந்த உரோம் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயம் சென்று அச்சபையினரைச் சந்தித்ததன் 25ம் ஆண்டை முன்னிட்டு 2008ம் ஆண்டில் அச்சபைத் தலைவர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இவ்வழைப்பை ஏற்று இஞ்ஞாயிறு பிற்பகலில் லூத்தரன் ஆலயம் சென்று அவர்களின் வழிபாட்டில் கலந்து கொள்வார், இது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதென அச்சபையின் குரு Jens-Martin Kruse கூறினார்.

மார்ட்டின் லூத்தர் பிறந்ததன் 500ம் ஆண்டை முன்னிட்டு 1983ம் ஆண்டு பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல், உரோம் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயம் சென்றார். இந்நிகழ்வு, 1517ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு திருத்தந்தை இந்த ஆலயத்தில் முதன்முறையாக உரையாற்றியதாக இருந்தது.








All the contents on this site are copyrighted ©.