2010-03-12 16:10:58

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது


மார்ச்12,2010 இந்தியாவிலிருக்கும் பில்லியனர்கள் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்க சஞ்சிகையான போர்ப்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 49 ஆக உயர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பில்லியன் என்பது நூறுகோடி.

போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் 25 பெரும் பணக்காரர்களில் பத்து இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பெரு நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், அவர் தான் இந்தியாவின் அதிகபட்ச பணக்காரர் என்றும் போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எக்குத்தொழிலில் உலகின் பெரும் வர்த்தகரான லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இவர் தனது வர்த்தகத்தை மேற்குலகில் நடத்தி பெரும் பொருள் ஈட்டியிருந்தாலும் தனது இந்திய குடியுரிமையையும் கடவுச்சீட்டையும் தொடர்ந்து வைத்திருப்பதால் இவர் இந்தியராகவே கருதப்படுகிறார்.

இவர்கள் இருவருமே, உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். இதில் அம்பானி நான்காவது இடத்திலும் மிட்டல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.