அனைத்திலும் முதன்மையான
கட்டளை எது? என இயேசுவிடம் மறைநூல் அறிஞர் கேட்கிறார். இயேசுவோ இணைச்சட்டநூல் 6:5ல்
குறிப்பிடப்பட்டுள்ள, “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” என்ற முதன்மைக் கட்டளையைக் கூறுகிறார்.
ஆனால் இயேசு தனது பதிலை அதோடு விட்டபாடில்லை. லேவியர் புத்தகம் 19: 18ல் குறிப்பிடப்பட்டுள்ள,
“உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்னும்
கட்டளையை யூதர்களின் முதன்மைக் கட்டளையோடு இணைக்கிறார். மறைநூல் அறிஞர் கேட்டதோ அனைத்திலும்
முதன்மையான கட்டளை எது என்பது. இயேசுவின் சாமார்த்தியமான பதிலோ இரண்டு கட்டளைகளை மையப்படுத்தியதாக
உள்ளது. இந்திய இறையியல் வல்லுநர் ஜார்ஜ் சுவாரஸ் பிரபு அவர்கள் தனது இயேசுவின் தர்மம்
என்ற நூலில் இப்பகுதியை விளக்கும் போது இரண்டாவது அயலார் சார்ந்த அன்புக் கட்டளையை வாழ்நது
காட்டாத எவரும் முதலாவது கடவுள் அன்புக் கட்டளையை வாழ முடியாது. எனவே இரண்டாவது கட்டளையானது
முதலாவதோடு இணைந்த முதன்மைக் கட்டளையே எனக் குறிப்பிடுகிறார். இதனைத்தான தூய யோவானும்
தனது மடலில் தனக்கு அருகில் இருக்கும் மனிதரை அன்பு செய்யாமல் கடவுளை அன்பு செய்கிறேன்
எனச் சொல்பவன் பொய்யன் என்கிறார்.
“கடவுள் அன்பும் அயலார் அன்பும்
ஒரு
நாணயத்தின் இரு பக்கங்கள்.
ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை”.(அ.பணி.பவுல்ராஜ்
சே.ச)