மார்ச்11,2010 பெண்களுக்கு வேறுபட்ட பல வழிகளில் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென திருத்தந்தையரும் பிறரும் அழைப்புகள்
விடுத்திருந்தாலும், பெண்கள் திருச்சபையின் பொறுப்புகளில் பங்கெடுக்க தடைகள் இருந்து
வந்திருக்கின்றன என்று வத்திக்கான் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இப்புதனன்று L'Osservatore Romano
என்ற பத்திரிகையில் Lucetta Scraffia என்ற இத்தாலிய நிருபர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பெண்களின் திறமைகளும், சிந்தனைகளும் திருச்சபையை இன்னும்
சிறப்பாக வழிநடத்திச் செல்ல உதவியாக இருந்திருக்கும் என்றும், அண்மையில் திருச்சபை சந்தித்து
வரும் ஒரு சில பிரச்சனைகள் பெண்களின் பங்கேற்பால் எளிதில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும்
Scraffia இக்கட்டுரையில் கூறியுள்ளார். குருத்துவ திருநிலைப்பாடு தவிர மற்ற பணிகளில் பெண்களின் பிரசன்னம்
திருச்சபைக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தையர் இரண்டாம் ஜான் பவுலும்,
16ஆம் பெனெடிக்டும் கூறியுள்ள கருத்துக்களை ஆசிரியர் தன் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.பொதுவாகவே
திருச்சபையின் பிற நிறுவனங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சமத்துவத்தை விட துறவற
சபைகளில் பெண்களின் பங்கு சரிவர புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்றும் Lucetta Scraffia தன்
கட்டுரையில் தெரிவித்துள்ளார்.