2010-03-10 15:25:50

தென் கொரியாவில் நான்கு முக்கிய நதிகள் மீதான அரசின் திட்டத்திற்குத் தலத்திருச்சபை எதிர்ப்பு


மார்ச்10,2010 தென் கொரியாவில் நான்கு முக்கிய நதிகளைத் தூர் வாருதல், அந்நதிகள் மீது அணைகள் கட்டுதல் போன்ற அரசின் திட்டத்திற்கான மக்களின் போராட்டத்திற்கு அந்நாட்டுத் தலத்திருச்சபை தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
நான்கு முக்கிய நதிகள் குறித்த கத்தோலிக்க ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஐந்து ஆயர்களும், 1104 குருக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
வெள்ளப் பெருக்கு, மாசுபடிதல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் அந்த நதிகளை சீரமைக்கும் பணிகளைச் செய்வதாகக் கூறி அவற்றைத் தூர்வாருதல் மற்றும் அணைகள் கட்டும் பணிகளில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளது.
அரசின் இப்பணிகள் நீரின் தன்மையை மோசமாக்கும் என்றும் இத்திட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும் சொல்லி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கத்தோலிக்கரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.1940 கோடி டாலர் செலவில் தென் கொரிய அரசு இத்திட்டத்தை நடத்தி வருகிறது.







All the contents on this site are copyrighted ©.