2010-03-09 16:19:42

விவிலியத் தேடல்:


RealAudioMP3 மரணம் நெருங்கி வருவதை உணரும் மனிதர்கள் என்ன பேசுவார்கள்? நம்மில் யாரும் அந்த அனுபவத்தை இன்னும் அடையவில்லை என்பதால், அந்த நேரத்தைப் பற்றி யூகித்துதான் சொல்ல முடியும். கட்டாயம் அந்த நேரத்தில் தேவையற்ற, சின்னச் சின்ன விஷயங்களைப் பேச மாட்டார்கள். மறு வாழ்வின் வாசலில் நிற்பவர்கள் வழக்கமாய் தாங்கள் விட்டுப் போகும் வாழ்க்கையில் அறிந்த உண்மைகளை, தங்கள் வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை, இதுவரைச் சொல்லத் தயங்கிய உண்மைகளை, உணர்வுகளைச் சொல்ல முயற்சி செய்வார்கள்.
மரணப் படுக்கையில் இருந்த மூவர் பெசிக்கொண்டதுதான் இன்றைய விவிலியத் தேடலின் மையச் சிந்தனை. இது சாதாரண மரணப் படுக்கை அல்ல. உடலால், உள்ளத்தால் சுக்கு நூறாய் உடைக்கப்பட்ட மூவரின் மரணப் படுக்கை. ஆம் அன்பர்களே, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த மூவரைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன்.
கல்வாரியைப் பற்றி நான் அடிக்கடி சொல்லி வரும் எச்சரிக்கையை மீண்டும் நினைவுறுத்துகிறேன். கல்வாரியைப் பற்றி, சிலுவைச் சாவைப் பற்றி நாம் பெரும்பாலும் கோவிலில் திருவழிபாடுகளில் கேட்டுவந்துள்ளதால், இந்த காட்சியைப் பற்றிய நம் எண்ணங்கள் சுத்தம் செய்யப்பட்ட எண்ணங்களாகவே இருக்கும். இயேசுவும் மற்றவர்களும் சொன்ன வார்த்தைகள் வெகு அமைதியாய், பக்தியாய் சொல்லப்பட்ட செபங்களைப் போல் நாம் நினைக்கத் தோன்றும்.
ஆனால், அன்புள்ளங்களே, அசல் கல்வாரி, அசல் சிலுவை எந்த வகையிலும் அழகாய், அமைதியாய் நடக்கவில்லை. உடலை மட்டும் வதைத்தால் போதாதென, அங்கு அறையப்பட்டவர்களின் உள்ளத்தையும் உடைக்கும் வண்ணம் அந்தக் குற்றவாளிகள் மக்கள் முன்னிலையில் முழுவதும் நிர்வாணமாக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டனர். உடல் வேதனைகளையாகிலும் எப்பாடு பட்டாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், தன்மானத்தை இழந்து, உள்ளத்தை நொறுக்கும்படி அவமானங்களை அவர்கள் மீது சுமத்தும் போது... அதுதான் கொடூர தண்டனையாகும்.
பல நாடுகளிலும் இன்றும் பின்பற்றப்படும் சித்ரவதைகளின் கொடு முடிகள் உடல் வேதனைகள் அல்ல. உள்ளத்தை உடைக்கும் சித்ரவதைகள் தாம். அந்தக் கொடுமைகளின் மத்தியிலும் இந்த மூவரும் பேசிக்கொண்டவைகளை எடுத்துக் கூறும் நற்செய்தி இதோ:

லூக்கா 23 : 39-43 
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றுஎன்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்றார்.  
அந்த மூவரும் பேசிய சொற்களிலிருந்து பல சிந்தனைகளை எழுப்பலாம். ஆனால், நாம் இந்த தவக்காலத்தின் விவிலியத் தேடல்களில் இயேசுவின் சொற்களை மட்டும் சிந்தித்து வருவதால், அவரது கூற்றை மட்டும் நம் சிந்தனைகளுக்கு எடுத்துக் கொள்வோம்.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்."
இயேசு தன்னோடு அறையுண்டிருந்தவருக்கு கொடுத்த அந்த உறுதிமொழியில் மூன்று உறுதிமொழிகள் உள்ளன.
"நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்.
நீர் என்னோடு இருப்பீர்.
நீர் இன்றே இருப்பீர்."

பேரின்ப வீட்டில் இருப்பீர்: பேரின்ப வீடு, அல்லது மோட்சம், விண்ணகம் எப்படி இருக்கும்? சின்ன வயது முதல் பார்த்த தமிழ் புராணப் படங்கள், மற்ற ஆங்கிலத் திரைப் படங்கள் அனைத்திலும் விண்ணகம் என்றதும், புகைமண்டலம், மேகம், மினு மினுக்கும் விண்மீன்கள், வெண்ணிறமாய் அல்லது தங்கத்தால் ஆன உடை அணிந்த தேவதூதர்கள் இசை, நடனம் என்று கொண்டாட்டமாய் இருக்கும். பெரியதொரு அரசவை போல் இருக்கும் அந்த மண்டபத்தில் அரசராய் ஒரு அரியணையில் நம் கடவுள் அமர்ந்திருப்பார். இது தான் விண்ணகத்தைப் பற்றி நான் கண்ட காட்சிகள்.
இறைமகன் இயேசு சிலுவையில் கொடுத்த இந்த உறுதி மொழியில் "பேரின்ப வீடு" என்ற சொற்களைப்  பயன்படுத்தியிருக்கிறார். எபிரேய மொழியில் அவர் சொன்ன இந்த அபூர்வ வார்த்தை விவிலியத்தில் இன்னும் (2 கொரி. 12: 3, திருவெளிப்பாடு 2: 7) இரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன.  இயேசு விண்ணகத்தை ஒரு வீடு என்று அதுவும் பேரின்ப வீடு என்று குறிப்பிடுகிறார். ‘விண்ணகம்’ என்ற வார்த்தையை விட ‘வீடு’ என்ற சொல் மனதுக்கு நெருக்கமான, நிறைவான ஒரு சொல்லாய் ஒலிக்கிறது.
ஆங்கிலத்தில் வீடு என்பதை குறிப்பிட இரு சொற்கள் பயன்படுத்தப்படும். House அல்லது Home. House என்பது நான்கு சுவர்கள், ஒரு கூரை, செங்கல் இவைகளால் ஆனது. Home என்பது மனங்களால், அன்பால் கட்டப்படுவது. ஆழமான அர்த்தம் தரும் ஒரு சொல். அதேபோல், நம் தமிழ் மரபிலும், வீடு பேறு என்று சொல்வது இந்த உலகத்தைக் கடந்து, ஒரு நிறைவான, நிலையான அமைதியை, அன்பு உணர்வை வெளிப்படுத்தும் சொல்.
வீடு என்பதை ஒரு இடம் என்று சொல்வதை விட ஒரு நிலை என்று சொல்வதே அதிகம் பொருந்தும். வீடு என்பது நாம் நாமாக, சுதந்திரமாக உணரக்கூடிய ஒரு நிலை. மனித மனங்களில் உணரப்படும் இந்த வீடுகள் வேறுபடலாம். திறந்த பரந்த புல்வெளிகள், பனிபடர்ந்த மலை முகடுகள், அடர்ந்த காட்டின் நடுப்பகுதி, ஆழ் கடலின் நடுப் பகுதி, அல்லது கூச்சலும் குழப்பமும் நிறைந்த ஒரு சந்தை, அழுக்கும் நாற்றமும் நிறைந்த ஒரு சேரி... இப்படி பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு "வீட்டுணர்வை" பெறலாம்.
இயேசு அந்த மனிதருக்குத் தந்த உறுதிமொழி இது தான். நீர் அலைந்து திரிந்தது போதும். "வீட்டுக்கு வாரும்" என்பது தான்.

இரண்டாவது உறுதி - நீர் என்னோடு இருப்பீர்: மலை உச்சியில், அடர்ந்த காட்டில், கடல் நடுவில்... வீடுகளை உணரலாம் என்று சிந்தித்தோம். வட துருவத்தில்  ஒரு பனிப் பாறையின் உச்சியில் நான் மட்டும் நின்றால், எப்படி இருக்கும்? குளிராக இருக்கும். தனிமையாக இருக்குமா? அது என் மனதைப் பொறுத்தது. தனியாக இருப்பதற்கும், தனிமையாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். ஆயிரம் பேர் கூடி இசை, நடனம் என்று கொண்டாடும் நேரங்களிலும் தனிமையாய் இருக்க வாய்ப்புகள் உண்டு. சனிக்கிழமை இரவுகளில், நம் பெருநகரங்களில் இப்போது அதிகரித்து வரும் வார இறுதி வைபவங்கள், டிஸ்கோ நடனங்கள் நடக்கும் இடங்களுக்குப் போனால், காதைப் பிளக்கும் ஓசைகளின் நடுவில், அங்குள்ளவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மனதைப் பார்க்ககூடிய ஒரு இயந்திரத்தைக் கொண்டு அவர்கள் மனதைப் பார்த்தால் அங்குள்ளவர்களில் பலர் தனிமைச் சிறைகளில் சிக்கியிருப்பது தெரியும். தனிமையில் இருப்பது வெறும் சிறை அல்ல. அதுதான் நரகம். தனிமை நரகத்திலிருந்து விடுதலை பெற அன்பு, அரவணைப்பு இவற்றை உணர வேண்டும். இயேசு அந்த அரவணைப்பைத் தான் "நீர் என்னோடு இருப்பீர்" என்ற வார்த்தைகள் வழியே அளிக்கிறார்.
இயேசுவோடு அறையப்பட்டிருந்தவர் பிறந்தது முதல் வாழ்க்கையின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டு, அன்பு, அரவணைப்பு, வாழக்கூடிய வாய்ப்பு இவைகளை இழந்ததனால், குற்றவாளியாய் மாறியிருக்க வேண்டும். குற்றங்கள் புரிய ஆரம்பித்ததும், இன்னும் அவர் மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்திருக்க வேண்டும். "நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று அவர் சிலுவையில் சொன்ன போது, தன் குற்றங்களை, தன் தனிமை உணர்வுகளை இயேசுவின் பாதங்களில் கொட்டுகிறார். அன்புக்கு, அரவணைப்புக்குக் காத்திருக்கும் அந்தக் குழந்தையின் மனதை புரிந்து கொண்ட இயேசு, அவரை உடலால் அரவணைக்க முடியவில்லை எனினும் உள்ளத்தால் அரவணைத்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் உறுதி மொழிகள் தான் “நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற சொற்கள்.
இயேசு மனு உரு எடுத்ததன் மையமே "கடவுள் நம்மோடு" என்று உணர்த்தத்தானே. தான் ஒரு எம்மானுவேல் என்ற உண்மையை சிலுவையிலும் இயேசு உணர்த்தியது அழகான ஒரு இறை வெளிப்பாடு.

மூன்றாவது உறுதி - இன்றே இருப்பீர். அன்பர்களே, இதை புரிந்து கொள்வது நமக்குக் கடினம். இயேசு சிலுவையில் அந்த குற்றவாளியைப் பார்த்து சொன்ன அந்த வார்த்தைகளில் எந்த வித நிபந்தனைகளும் இல்லை.
நிபந்தனைகளோடு இயேசு பேசியிருந்தால், அவரது சொற்கள் இப்படி இருந்திருக்கும்: “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று வேண்டிய அவரைப் பார்த்து: “நீயா? இத்தனைக் குற்றங்கள் செய்தவனா? விண்ணகத்திலா? ம்… பார்ப்போம். ஒரு சில ஆண்டுகள் உன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டு, பிறகு வா. அப்போது உன்னை விண்ணகத்தில் சேர்க்க முடியுமா என்று பார்ப்போம்.” இப்படிப்பட்ட வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இயேசு சொன்னது “இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற உறுதி மட்டுமே.
பேதுருவின் இரண்டாம் திருமுகத்தில் நாம் காணும் வரிகள் இயேசுவின் "இன்றே" என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள உதவும்.

பேதுரு இரண்டாம் திருமுகம் 3: 8 
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. 
காலம் என்பது மனிதர்களாகிய நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அளவு. நொடி, நிமிடம் என்று ஆரம்பித்து ஆயிரம் வருடங்கள் கோடான கோடி வருடங்கள் என்று நாம் எண்ணிக்கொண்டே இருக்கலாம். நேற்று, இன்று, நாளை, என்று பல பாகுபாடுகள் செய்து கொள்ளலாம். இறைவனுக்கு இவைகள் கிடையாது. அவருக்கு எப்போதும் இன்றே... இப்போதே... நிகழ் காலம் மட்டுமே. இறைவன் இருக்கும் போது அங்கு எப்போதும், நிரந்தரமாய், நித்தியமாய் நிகழ் காலம் மட்டுமே இருக்கும். மனித அறிவால் இதைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் நாம் அனைவரும் நாம் ஏற்படுத்திய காலத்தின் கைதிகள்.
நேரத்தைப் பற்றியே எந்த விதக் கவலையும் இல்லாமல் வாழ முடியுமா? சில நேரங்களில் இப்படி வாழ்ந்திருக்கிறோம். நம் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலில் ஈடுபடும் போது, உதாரணத்திற்கு, அழகான இசையில் முற்றிலும் நம்மை மறந்திருக்கும் போது, அல்லது நம் மனதிற்குப் பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது... ஆழ்நிலை தியானகளில் மூழ்கும் போது... இந்த நேரங்களில் நேரம் போனதே தெரியாமல் இருந்திருக்கிறோம் இல்லையா?நேரத்தின் நிர்ப்பந்தங்கள் இருக்கக் கூடாதென, விடுமுறைகளுக்குச் செல்வதில்லையா? நேரம் என்பது முக்கியமில்லை, நேரம் பற்றிய கவலை தேவையில்லை என்று நாம் வாழ்ந்த இந்த குறுகிய காலங்களை முழு வாழ்க்கையிலும் உணர்வது தான் இறைவனுடன் நாம் இருக்கப் போகும் நேரம். அந்த அற்புத காலத்தை இயேசு அந்த குற்றவாளிக்குத் தரும் வகையில் அவரிடம்  "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." என்று சொன்னார். இயேசுவின் இந்த உறுதி மொழியை நாமும் பெற விழைவோம்.







All the contents on this site are copyrighted ©.