தவக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருட்பணி பவுல்ராஜ், சே.ச. யாவே கடவுள் தனது மக்களுடன் செய்து
கொண்ட உடன்படிக்கையின் படி வாக்களிக்கப்பட்ட நாட்டைச் சென்றடைந்து அதனை உரிமையாக்கிக்
கொள்வதற்கு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளை விளக்கிக் கூறுகிறது, இணைச்சட்ட நூலில்
இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம். மோசே தலைமையில் புதிய நாட்டை நோக்கி சென்ற பயணம்
நம் ஒவ்வொருவரது விண்ணகப் பயணத்திற்கும் முன்னுதாரணமாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய
நற்செய்தியில் திருச்சட்டமும், இறைவாக்குகளும் இவ்வுலக வாழ்விற்கும், விண்ணக வாழ்விற்கும்
மிக முக்கியமானவை என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். இவை அனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கிறவரே
விண்ணரசில் மிகப் பெரியவர் என்கிறார் இயேசு. திருச்சட்டமும் இறைவாக்குகளும் கற்பிப்பவை
முழுவதும் இயேசுவின் அன்புக் கட்டளையில் அடங்குகிறது. லத்தீன் அமெரிக்க யேசுசபை இறையியல்
வல்லுநர் ஜான் சொப்ரினோ பார்வையில் "திருச்சட்டமும் இறை வாக்குகளும் இயேசு என்னும் ஆளில் நிறைவும், முழுமையும்
அடைகிறது. எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் சட்டங்களை வாழப் போவதில்லை; இயேசு என்னும் ஆளையே நமது வாழும்
சூழலில் வாழ்ந்து காட்ட அழைக்கப் படுகிறோம்", என்கிறார். இறையரசில் நாம் மிகப் பெரியவர்களாக
மாறிட இவ்வுலக வாழ்வில் தினம்இயேசு கிறிஸ்துவாக மாறும் திருப்பயணம் தொடர்வோம்.