பிப்.17,2010 ஈராக்கின் வட பகுதியில் Mosul என்ற இடத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த
சில நாட்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமான இந்த தாக்குதல்கள் தொடர்ந்து
வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் இரு கிறிஸ்தவ வியாபாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்
வேறொருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்டவரை விடுவிக்க பெரும் தொகை ஒன்றை கடத்தல் காரர்கள் கேட்டுள்ளனர் என்றும் ஒரு
செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெயரைக் குறிப்பிட விரும்பாத கிறிஸ்தவர்கள் சிலர் செய்தித்
தாளொன்றுக்கு அளித்த பேட்டியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் இந்தத் தாக்குதல்கள் சாதாரணமான
குற்றவாளிகளால் செய்யப்படவில்லை என்றும், இந்தத் தாக்குதல்கள் அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்
கூறினர். இந்தத் தாக்குதல்களைக் கண்டும், கேட்டும் அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது பெரும்
ஏமாற்றத்தைத் தருகிறது என கிறிஸ்தவ தலைவர் ஒருவர் கூறினார்.