சீனத் தத்துவயியலாளர்
கன்பியூசியுஸ் சொல்கிறார்: "இதயத்தில் நேர்மை இருந்தால், தனி மனித வாழ்வில் அழகு மிளிரும்;
தனி மனித அழகு மிளிர்ந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்; குடும்பத்தில் அமைதி நிலவினால்,
நாட்டில் வளமை பெருகும்; நாட்டில் வளமை பெருகினால் உலகில் சமாதானம் ஊற்றெடுக்கும்."
ஆம்,
அன்பானவர்களே, தவக்காலத்தின் முதல் நாளாகிய திருநீற்றுப் புதன் திருவிழாவில் இயேசு மூன்று அறச் செயல்களை மறைவாகச்
செயல்படுத்திட நம்மை அழைக்கிறார். தர்மம், இறை வேண்டல், நோன்பு ஆகிய இம்மூன்று அறச் செயல்களும் தனி
மனித இதயங்களிலும், வாழ்விலும் அழகைச் சேர்த்து, குடும்பங்களில் அமைதியை ஏற்படுத்தி,
சமூகத்தில் வளமையையும், சமாதானத்தையும் உருவாக்கக்கூடிய கருவிகளாக இயேசுவின் பார்வையில் அமைகின்றன.
தனி மனித மாற்றமானது சமூக மாற்றத்திற்கான தொடக்கமாக அமைவதால் இயேசு நம் ஒவ்வொருவரையும்
இத்தவக் காலத்தில் மாற்றம் பெற அழைக்கிறார். இம்மாற்றம் நமது ஏற்றத் தாழ்வு மிக்க சமூகத்தையும்
மாற்றி, இறையரசு நிலை பெற உதவும் என கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புவோம். தவக்காலம் அன்பின் காலம்,
அருளின் காலம், தனி மனித மற்றும் சமூக மாற்றத்தின் காலம், இறையாட்சிக் கனவை நனவாக்க உதவும்
காலம், மனிதம் புனிதமடையும் காலம், மனமாற்றத்திற்கான காலம், மண்ணிலே விண்ணை விதைக்கும் காலம்.