18வது உலக நோயாளர் தினத்திற்கான திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
பிப்.11,2010 நற்செய்தி அறிவிப்பதும் உடலிலும் உள்ளத்திலும் நோயாய் இருப்பவரைக் குணமாக்குவதும்
திருச்சபையின் இரண்டு முக்கிய பணிகளாக இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கூறினார். கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து செய்யக் கடமைப்பட்டுள்ள திருச்சபை, இந்த
இரண்டு முக்கியமான பணிகளைப் புறக்கணிக்க முடியாது என்றும் திருத்தந்தை கூறினார். 18வது
உலக நோயாளர் தினம், மற்றும் நோயாளிகளுக்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவை உருவாக்கப்பட்டதன்
25ம் ஆண்டு நிறைவு, ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதமாக இவ்வியாழனன்று வத்திக்கான் தூய
பேதுரு பசிலிக்காவில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை. நோயாளிகளுக்குத்
திருப்பயணங்களை ஏற்பாடு செய்யும் UNITALSI என்ற அமைப்பின் ஏறத்தாழ ஐயாயிரம் உறுப்பினர்கள்,
நோயாளிகள் மற்றும் திருப்பயணிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியில் ஆற்றிய உரையில், கடவுள்
முழு மனிதனையும் குணப்படுத்த விரும்புகிறார் என்றும், நற்செய்தியில் உடல் குணமடைதல் என்பது,
பாவ மன்னிப்பை உள்ளடக்கியதாய் மனிதன் முழுவதும் பழைய நிலைக்குத் திரும்புவதன் அடையாளமே
என்றார். நோயாளிகள் மேல் தான் கொண்டுள்ள தாயன்பை வெளிக்காட்ட, மரியா லூர்து நகரில் தோன்றிய நிகழ்வை தன்
மறையுரையில் நினைவுபடுத்திய திருத்தந்தை, அன்றைய திருவழிபாடு கடவுளின் கருணையை வெளிப்படுத்தும் மரியாவின் புகழுரையை தியானிக்க நம்மை
அழைக்கிறதேன்று கூறினார். மேலும், இந்த ஆண்டு குருக்களின் ஆண்டாக இருப்பதால், குருக்களுக்கும் நோயுற்றோருக்கும் உள்ள தொடர்பையும்,
நோயுற்றோருக்கான குருக்களின் தனிப்பட்ட சேவையின் மாண்பையும் எடுத்துரைத்தார்.