பிப். 10, 2010. மத்திய கால கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறை போதகத்தின் தொடர்ச்சியாக
இன்று நாம், பதுவையின் புனித அந்தோனியார் நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம் என இவ்வார
புதன் பொதுமறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பிரான்சிஸ்கன் இறையியல்
மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் அடிக்கற்களை பதித்ததில் உதவிய புனித பிரான்சிஸ் அசிசியின்
காலத்தில் வாழ்ந்தவர் இவர். லிஸ்பனில் பிறந்த புனித அந்தோனியார் முதலில் அகுஸ்தீனார்
துறவுசபையின் அங்கத்தினராகவும் பின்னர் பிரான்சிஸ்கன் துறவியாகவும் மாறினார். அவரின்
உன்னத பேச்சுத்திறனும், அறிவாற்றலும் அவர் காலத்தின் முக்கிய போதகர்களுள் ஒருவராக அவரை
மாற்றின. நற்செய்தியின் பாரம்பரிய சாரத்தை உள்ளடக்கிய இவரின் மறையுரைகள், கிறிஸ்தவ வாழ்வினில்
வளர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும், இறைவனுடன் ஆன அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த
உரையாடலாய் இருக்கும் ஜெபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தன. ஆன்மீக
அறிவை வழங்கி நம் வாழ்வை புதுப்பித்து மாற்றியமைக்கும் இறையன்பை வலியுறுத்திக் கூறும்
பிரான்சிஸ்கன் இறையியலின் முக்கியக்கூறை இவரின் மறையுரைகளில் காண்கிறோம். பொருளாதார வளர்ச்சி
பெரிய அளவில் இடம்பெற்று வந்த அக்காலத்தில், நம் உள்மன செல்வங்கள் வளப்படுத்தப்படுவதற்கும்
ஏழைகளின் தேவைகள் குறித்த நம் அக்கறைக்கும் அழைப்பு விடுத்தார் புனித அந்தோனியார்.
கிறிஸ்துவின்
மனிதத்தன்மை குறித்து குறிப்பாக இயேசுவின் பிறப்பு மற்றும் சிலுவை மரணம் பற்றிய மறையுண்மைகள்
குறித்து ஆழமாக தியானிப்பதை வலியுறுத்தும் இவரின் அழைப்பானது, பிரான்சிஸ்கன் பாரம்பரியமாகும்.
குருக்களுக்கான இவ்வாண்டின்போது,
அனைத்து போதகர்களும் கிறிஸ்துவின் மீதான பற்றியெரியும் அன்பையும், ஜெபத்தில் ஆண்டவருடன்
ஆன நெருக்கத்திற்கானத் தாகத்தையும், இறைவார்த்தையின் அழகு மற்றும் உண்மையை ஆழமாக ஏற்று
பாராட்டுவதையும் எடுத்துரைக்க உதவுமாறு புனித அந்தோனியாரிடம் வேண்டுவோம்.
இவ்வாறு
பொது மறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்
அளித்தார்.