பிப்.08,2010 கடந்த வாரத்தில் ஒருநாள் அருள்தந்தை ஜெரி, மதியம் சாப்பாட்டுக்கு இல்லம்
சென்று திரும்பி வந்தவுடன் ஒரு செய்தி சொன்னார். இன்று ஜெர்மனியில் என் நண்பர் ஒருவர்
திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு நீரழிவு நோய் முற்றி இருப்பது தெரியாமல்
போய்விட்டது. அதனால் சிகிச்சையைத் தாமதாகத் தொடங்கினார்கள். ஊரிலிருந்து வந்திருந்த தனது
மகளுடன் வெளியே சென்று வரலாம் என்று திட்டம் போட்ட அவர், கழிவறைக்குச் சென்றார். நெடுநேரம்
ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி ஜன்னல் வழியே உள்ளே பார்த்திருக்கிறார். ஆள்
கழிவறையிலேயே நிலைதடுமாறி கிடந்துள்ளார். நீரழிவு நோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் வலி
தெரிவதில்லை. இதுதான் பெரிய ஆபத்து என்றார் தந்தை ஜெரி. அன்பர்களே, இந்த நீரழிவு நோயால்
2005ம் ஆண்டில் மட்டும் உலகில் ஏறத்தாழ 11 இலட்சம் பேர் இறந்துள்ளனர். தற்சமயம் சுமார்
22 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் இறப்புகளில்
ஏறத்தாழ எண்பது விழுக்காடு, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் அதிகம் இடம்
பெறுகின்றது. இவ்விறப்புகள் 2030ம் ஆண்டுக்குள் இருமடங்குக்கு அதிகமாகும். இந்நோயால்
இறக்கும் மக்களில் ஏறத்தாழ பாதிப்பேர் எழுபது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 55 விழுக்காடு
பெண்கள் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இன்னும் ஓர்
அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிக எண்ணிக்கையில்
இருக்கிறார்கள். தற்சமயம் இந்தியாவில் மூன்று கோடியே இருபது இலட்சமாக இருக்கும் இவ்வெண்ணிக்கை,
2030ம் ஆண்டுக்குள் எட்டு கோடியாக இருக்கும். தமிழகத்தில்தான் இந்நோயாளிகளின் எண்ணிக்கை
மிக அதிகம். 2025ம் ஆண்டுக்குள் உலகிலுள்ள இந்நோயாளிகளுள் 75 விழுக்காட்டுக்கு அதிகமானோர்
இந்தியாவில் இருப்பார்கள். இந்த நிலையில் தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம், இன்சுலின்
ஊசி மருந்தின் விலையில் 15 விழுக்காட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்று மருந்து தயாரிக்கும்
நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ஒரு குப்பியின் விலை இருபது ரூபாய்
அதிகரிக்கிறது என்று கடந்த வாரச் செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. இந்நோய் நம் உடலில்
நமக்குத் தெரியாமலேயே அமைதியாக இருந்து நம் உடலை பாதிக்கும் ஆற்றல் பெற்றது. இந்நோயினால்
தாக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படையாய்த் தெரிவதில்லை என்று
நீரழிவு நோய் நிபுணர் டாக்டர் மோகன் எச்சரிக்கிறார்.
எனவே இது பற்றி நம்
வானொலி நேயர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இன்று இந்நிகழ்ச்சியை
வழங்க விரும்பினோம். இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள்
நிறுவனமும், “நீலநிற வளையம்” கொண்ட ஒரு தனிப்பட்ட சின்னத்தை வெளியிட்டிருக்கிறது. எய்ட்ஸ்
நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே இப்படி ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஐக்கிய
நாடுகள் நிறுவனம் அறிவித்திருப்பதிலிருந்து இந்நோய் முன்வைக்கும் கடும் அச்சுறுத்தலை
ஊகிக்கலாம்.
இந்த நீரழிவு நோயை, Diabetes என்றும் சர்க்கரை நோய் என்றும் இனிப்பு
வியாதி என்றும் அழைக்கின்றோம். சர்க்கரை நோய் என்று சொல்வதால், சர்க்கரை, இனிப்புப் பண்டங்கள்
ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் இந்நோய் வருமா என்று சிலர் கேட்டதுண்டு. இந்திய வேளாண்துறை
அமைச்சர் ஷரத்பவாரின் கட்சிக்காரர்கள் (Sharad Pawar's NCP) சர்க்கரை அதிகம் சாப்பிடாதீர்கள்
என்று கூறியிருப்பதாக இஞ்ஞாயிறன்று ஊடகச் செய்தி ஒன்றில் வாசித்தோம். ஒருசமயம் ஒருதாய்
தன் மகனை காந்திஜியிடம் அழைத்துச் சென்று, இவன் அதிகம் சர்க்கரை சாப்பிடுகிறான். எனவே
இவனுக்குப் புத்தி சொல்லுங்கள் என்று கேட்ட நிகழ்ச்சி பற்றியும் நமக்குத் தெரியும். ஆனால்
நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் பாலாஜி என்ன சொல்கிறார் என்றால் , உடல் நலமாக இருக்கும்
சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும்
அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும்
நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும்
அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக் காரணிகளும்,
சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் என்கிறார்.
இரவு நேரம் உட்பட
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தோலில் அரிப்பு ஏற்படுதல், பார்வை மங்கலடைதல், சோர்வாகவும்
பலவீனமாகவும் உணர்தல், பாதம் மரத்துப்போதல், அதிகப்படியான தாகம், காயங்கள் எளிதில் ஆறாமல்
இருத்தல், அதிகமாகப் பசித்தல், காரணமில்லாத எடைகுறைவு, தோல் வியாதிகள் ஏற்படுதல், உடம்பில்
வலியெடுத்தல், அடிக்கடி சிறுசிறு நோய்கள் தொற்றுதல் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்
என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒருவருக்கு இந்த வியாதி ஏற்படுவதற்கு காரணத்தையும்
அவர்கள் விளக்குகிறார்கள்.
மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை.
நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்துதான் சர்க்கரையாக அதாவது குளுக்கோஸாக மாறி,
இரத்தத்தில் கலந்து உடல் இயக்கத்திற்குத் தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி இரத்தத்தில்
கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும்
கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின்தான்
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின்
அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை
அப்படியே தேங்கிவிடும். இப்படி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட
அளவுக்கு அதிகமாக இருப்பதுதான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. ஒருவருக்கு சர்க்கரை
நோய் வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை
வைத்து கண்டுபிடிக்கலாம்.
இந்த நோய் ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எகிப்தில் அறியப்பட்டிருந்ததற்கான வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை
கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா என்கிற மருத்துவர் இந்த நோய் குறித்த
குறிப்பை பதிவு செய்திருக்கிறார். இதற்கான உறுதியான சிகிச்சை முறை இருபதாம் நூற்றாண்டில்தான்
உருவானது. 1922ஆம் ஆண்டில் Frederick Banting என்பவர், Charles Best என்பவரோடு சேர்ந்து
இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தார். Frederick Banting
என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது இந்நோய், சர்வ சாதாரணமாக ஏழை, செல்வந்தர், குழந்தைகள், இளவயது, முதுவயது
என எல்லா தரப்பினரையும் பாதிக்கிறது. ஆனால் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை
நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் பயப்படத் தேவையில்லை. இந்நோய் நம்மை ஆளுவதற்கு
முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை
செய்ய வேண்டுமெனச் சொல்லாமல் அதனைச் சமாளிக்கத் தெரிந்து கொள்ள வேண்டுமெனச் சொல்கிறார்கள்.
இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள்
வைத்துக் கொள்ளவும் முடியும். இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுபட வைப்பது முறையான
உணவும், யோகாசனங்களும், தேவையான உடற்பயிற்சியும் குறிப்பாக நடைப் பயிற்சியுமே ஆகும்.
உணவில் கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி, உடல்சுத்தம், தோல் பராமரிப்பு, சுகாதாரம்,
புகையிலையைத் தவிர்த்தல் மற்றும் இன்சுலினை மருத்துவரின் அறிவுரைப்படி ஊசியாகவோ அல்லது
மாத்திரை வடிவிலோ எடுத்துக் கொள்வது இந்நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுத்து நிறுத்தும்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது அது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. முப்பது
நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தி பயன்படுத்தப்படுகிறது. தவறாமல்
குளிப்பது, உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஒரு நாளைக்கு இரண்டுமுறை பல்துலக்குவது,
காயங்களைப் பராமரித்தல் போன்றவை மிகவும் அவசியம்.
இந்த சர்க்கரை நோய், உடலில்
அமைதியாக இருந்து வேறு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் கொல்லுகின்றது. பொதுவாக ஆரோக்யமான
மனதைக் கொண்டவரை நோய்கள் தீண்டாது என்பார்கள். எனினும் அன்றாட பரபரப்பான வாழ்வுடன் தொடர்புடைய
மனஅழுத்தம், மனப்பதட்டம், கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகள் பலரது வாழ்வைப் புரட்டிப்
போடுகின்றன. சிறிது சிறிதாகச் சேமித்து வைக்கும் இந்தத் தகாத உணர்வுகள் நோய்களாக வடிவங்கள்
எடுக்கின்றன. இந்தச் சர்க்கரை நோய் அல்லது நீரழிவு நோய்க்கு முக்கிய காரணம் மனஅழுத்தம்
என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
ஒருசமயம் ஜப்பானில் சர்க்கரை நோய் அறிகுறிகள்
உள்ள முப்பது பேரை அழைத்து நல்ல சாப்பாடு கொடுத்து அதன் முடிவில் ஒரு கடும் அறுவையான
உரையைக் கேட்க வைத்தார்கள். உரை முடிந்ததும் இரத்தத்தைப் பரிசோதித்த போது சர்க்கரையின்
அளவு நன்றாக அதிகரித்து இருந்ததாம். சிலநாட்கள் கழித்து அவர்களை மீண்டும் அழைத்து முன்பு
போல் நல்ல சாப்பாடு கொடுத்து பின்னர் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை
நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தார்கள். பின்னர் இரத்தத்தைப் பரிசோதித்த போது சர்க்கரையின்
அளவு மிகவும் குறைந்திருந்ததாம். எனவே சர்க்கரை நோயாளிகளே மனம்விட்டுச் சிரியுங்கள்.
சிரிப்பதோடு மருந்தை மறந்து விடாதீர்கள். நோய்க்கான உரிய மருத்துவத்தோடு சிரியுங்கள்.
அது பயனுள்ள மருந்தாக அமையும். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, அனைவருமே மனம்விட்டுச்
சிரியுங்கள். நோய்கள் உங்களைக் கண்டு பயந்து ஓடும்.