மதங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும் தீயசக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க மலேசியப்
பல்சமயத் தலைவர்கள் அழைப்பு
சன.28,2010 மதங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும் தீயசக்திகளின் வலைக்குள் வாழ வேண்டாம்
மலேசியக் குடிமக்களுக்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் ஏனைய மதப் பிரதிநிதிகளும் விண்ணப்பம்
ஒன்றை விடுத்துள்ளனர்.
கோலாலம்பூரின் இரண்டு மசூதி வளாகங்களுக்குள் பன்றித் தலைகளை
இப்புதனன்று யாரோ வீசியெறிந்து சென்றுள்ளதைக் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட மலேசிய
கிறிஸ்தவ கூட்டமைப்பு, இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் மலேசியாவைப் பிளவுபடுத்த வழிவகுக்கும்
என்பதால் குடிமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டுமெனக் கோரியுள்ளது.
இத்தகைய வன்முறை
நடவடிக்கைகள் குறித்த உணர்ச்சி மோதல்களுக்கு இடம் கொடாமல் இவைகளை காவல்துறைவசம் விடவேண்டும்
என்ற ஆங்கிலக்கன் ஆயர் நிக் மூன் ஹிங், நாட்டின் அமைதிக்காக ஒவ்வொருவரும் செபிக்க வேண்டும்
எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவில் மதங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும்
சில தீயசக்திகளின் செயல்பாடு குறித்து அந்நாட்டின் புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம்
மற்றும் தாவோயிச மதங்களின் ஒன்றிணைந்த ஆலோசனை அவையும் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.